சுச்சி லீக்ஸ் புகார்கள் தவறானவை. அது குறித்த உண்மைகள் தற்போது வெளியாகியுள்ளதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்...
இதுகுறித்து சின்மயி வெளியிட்டுள்ள விடியோவில் கூறியதாவது:
என் மீதான சுச்சி லீக்ஸ் புகார்கள் தவறானவை என்று சுசித்ராவின் கணவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அப்புகார்கள் வெளியான பிறகு, சுச்சி லீக்ஸ் தொடர்புடைய என்னுடைய வீடியோவை வெளியிடுமாறு பலர் கேட்டார்கள். கொச்சை வார்த்தைகளால் என்னைத் திட்டினார்கள். அப்போதே என்னிடம் வருத்தம் தெரிவித்து, தனக்கு மனநிலை சரியில்லை என சுசித்ரா மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார். ஆனால் தனிப்பட்ட மின்னஞ்சல் என்பதால் அதை நான் பகிரவில்லை. இன்று சுசித்ராவின் கணவர் கார்த்திக், தன் மனைவிக்கு மனநிலை சரியில்லாத சமயத்தில் அப்புகார்கள் கூறப்பட்டன. அவையெல்லாம் தவறானவை என்று கூறியுள்ளார். உண்மை ஒருநாள் கட்டாயம் வெளிவரும் எனக் கூறியிருந்தேன். உண்மை வெளிவந்துள்ளது. அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று சின்மயி விடியோவில் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம், பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். பிறகு, அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டன. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் நீக்கப்பட்டது. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டப்பட்டது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையிடம் மனு அளித்தார் சுசித்ரா.