அண்மைக் காலமாகச் சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
நண்பன், ராஜா ராணி, என்றென்றும் புன்னகை, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள நடிகர் டிஎம் கார்த்திக் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மீது தனக்கு வந்த புகாரை ட்விட்டரில் வெளியிட்டார் பாடகி சின்மயி. இந்நிலையில் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் டிஎம் கார்த்திக். அதில் அவர் கூறியதாவது:
என்னுடனான சந்திப்புகளில் சங்கடத்தை உணர்ந்த பெண்களிடம் மன்னிப்பு கோருகிறேன். தனிப்பட்ட முறையிலும் தொழில் முறையிலும் பெண்களிடம் மிகுந்த மரியாதையாகவே நடந்துகொண்டுள்ளேன். எனினும் நான் தொடங்கி வைத்த அனைத்துவிதமான உடல் ரீதியான தொடர்புகளும் உறவுகளும் இரு மனங்களின் ஒப்புதலுடனே நடைபெற்றன என நம்பினேன். நிச்சயம் தவறுதான். சில சமயங்களில் பாலியல் ரீதியான விருப்பங்களில் நான் எல்லையை மீறியிருக்கலாம் என இப்போது உணர்கிறேன்.
எந்தப் பெண்ணையும் சங்கடப்படுத்தவேண்டும் என நான் எண்ணியதில்லை. விழிப்புணர்வுடன் என்னுடைய நடத்தையால் எல்லையை மீறியதில்லை. குறிப்பிட்ட பெண்ணுக்கு விருப்பமில்லாதபோது விலகக் கடும் முயற்சி எடுத்த நான், அவ்விஷயத்தில் எப்போதும் சரியாகச் செயல்படவில்லை என உணர்கிறேன். என்னுடனான தொடர்புகளில் சங்கடத்தையும் வலியையும் உணர்ந்த எவருக்கும் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மீ டூ இயக்கம், என்னுடைய நடத்தையையும் பழைய சம்பவங்களையும் மதிப்பிட உதவுகிறது. கடந்த பல வருடங்களில் பல துறைகளில் ஏராளமான பெண்களுடன் பணியாற்றியுள்ளேன். பெண்ணியச் செயல்பாடுகளில் என்னையும் இணைத்துக்கொண்டுள்ளதைப் பெருமையாகக் கருதியுள்ளேன். என்னுடைய நடவடிக்கையால் எந்தப் பெண்ணையும் சங்கடப்படுத்த விரும்பியதில்லை. என்னுடைய நடத்தை குறித்து எதிர்மறையான கருத்துகள் வராததால் நான் அதைத் தவறாக எண்ணிவிட்டேன். இது என் தவறுதான். நான் இன்னமும் கண்காணிப்புடன் இருந்திருக்கவேண்டும். சில பெண்களின் சங்கடங்களை நான் உணர்த்திருக்கவேண்டும். என் நடவடிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கும்படியான சூழலுக்கு ஆளாகியிருக்கக்கூடாது.
என் தவறுகளுக்கு நான் முழுப் பொறுப்பு ஏற்கிறேன். வேறொரு தளத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றாலும் அதற்குத் தயாராக உள்ளேன்.
வருங்காலத்தில் என்னைத் திருத்திக்கொள்வதற்குத் தயாராக உள்ளேன். மீ டூ இயக்கத்தைத் தொடர்ந்து ஆதரவளிப்பேன். உலகம் பெண்களுக்குப் பாதுகாப்பான இடமாக அமைய என் பங்களிப்பை அளிப்பேன் என்று கூறியுள்ளார்.