அண்மைக் காலமாகச் சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
மீ டூ புகார்களில் நடிகர் ராதாரவி மீது புகார் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தன் மீதான புகாருக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஸ்டார் குஞ்சுமோன் இயக்கத்தில் வி.ஆர். விநாயக், மீரா நாயர் நடித்துள்ள அவதார வேட்டை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி பங்கேற்றுப் பேசியதாவது:
இயக்குநர்கள் மிகவும் கஷ்டப்பட்டு இயக்குநர் ஆகிறார்கள். எதாவது குறை சொல்லி பழிபாவத்துக்கு ஆளாகாதீர்கள். திரையுலகில் இப்போதுதான் என்னைப் பற்றி குறை சொல்கிறார்கள். ஒருகாலத்தில் சினிமாவைச் சந்தோஷமாக அணுகினார்கள். இப்போது சினிமாவில் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். திரையுலகக் கலைஞர்களிடையே மோதல் ஏற்பட்ட படம் ஓடியதாகச் சரித்திரம் இல்லை.
திரைத்துறைக்கும் மீ டூ-வுக்கும் சம்பந்தமில்ல. எந்தவொரு சினிமாக்காரனும் புகார் தராதீர்கள். அது பெரிய இடத்துக்கு விவகாரம். புகார் அளித்து உங்களைத் தரம் தாழ்த்திக்கொள்ளக்கூடாது. முற்போக்காக உள்ள பெண்களைக் கேட்டுக்கொள்கிறேன். பிரச்னையை அன்றைக்கே சொன்னால் அன்றைக்கே பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளலாமே. பிறகு சொன்னால் எப்படிக் கண்டுபிடிக்கமுடியும்? உங்களுடைய மதிப்புகளை நீங்களே கெடுத்துக்கொள்ளாதீர்கள். இதனால் நீங்கள் கீழே போய்க்கொண்டிருக்கிறீர்கள் என்று பேசியுள்ளார்.