அண்மைகாலமாகச் சமூகவலைத்தளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இயக்குநர் சுசி கணேசன் மீது புகார் தெரிவித்துள்ளார் கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை. காரில் வைத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து இருவரும் பேட்டியளித்தார்கள். இதையடுத்து ஃபேஸ்புக்கில் கவிஞர் லீனா மணிமேகலை தெரிவித்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடந்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் லீனா மணிமேகலைக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நடிகர் சித்தார்த், சுசி கணேசன் தன்னுடைய தந்தையை மிரட்டியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
என்னுடைய வயதான தந்தையிடம் போனில் பேசியுள்ளார் இயக்குநர் சுசி கணேசன். நான் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக இருந்தால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எங்களை மிரட்டியுள்ளார். இதனால் நான் அனைவருக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால், முன்பை விடவும் இப்போது நான் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக உள்ளேன். மனவலிமையுடன் போராடுங்கள் சகோதரி என்று கூறியுள்ளார்.