தன் மீது பொய்க்குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளதாக கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார். இதற்கு லீனா மணிமேகலை பதில் அளித்துள்ளார்.
அண்மைகாலமாகச் சமூகவலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் இயக்குநர் சுசி கணேசன் மீது புகார் தெரிவித்துள்ளார் கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை. காரில் வைத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து இருவரும் பேட்டியளித்தார்கள். இதையடுத்து ஃபேஸ்புக்கில் கவிஞர் லீனா மணிமேகலை தெரிவித்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடந்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.
கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார். லீனா மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் மனு அளித்துள்ளார். இதற்கு ஃபேஸ்புக்கில் பதில் அளித்துள்ளார் லீனா மணிமேகலை. அவர் கூறியதாவது:
சுசி கணேசன், என் மேல் கிரிமினல் கேஸ் போட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடுகிறார். முதலில் கோர்ட்டில் நம்பர் ஆகட்டும். எனக்கு நோட்டீஸ் வரட்டும். என்ன சொல்லியிருக்கிறார் எனப் பார்த்துவிட்டு, அதை நசுக்குவேன். பொய்யர்களோடு அல்லாமல் நேரடியாக அதிகாரத்தோடு போர் புரிவதும்தான் எனக்கும் பிடிக்கும். மீ டூ இயக்க வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.