திருட்டு டிவிடி புகாரில் 10 திரையரங்குகளுக்குப் புதிய படங்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில் விஷால் நடித்து நாளை வெளிவருகிற சண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் எனத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
திருட்டு டிவிடி தயாரிக்க உதவியதாக 10 திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். 10 திரையரங்குகளுக்குப் புதிய படங்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து நாளை வெளிவருகிற சண்டக்கோழி 2 பட வெளியீட்டுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் எனக் கூறியுள்ளது.
10 திரையரங்குகள் மீதான வழக்கை வாபஸ் பெறாவிட்டால் விஷால் நடித்துள்ள சண்டக்கோழி 2 படத்தைத் திரையிட மாட்டோம். திரையரங்குகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் மீது விசாரணை இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருட்டு டிவிடி தயாரிக்க உடந்தையாக இருந்ததாகச் சில திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் எனத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கப் பொருளாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.