பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ள கேப்டன் ராஜு (68), கடந்த ஜூன் மாதம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒமனுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே மஸ்கட்டில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். முதல் உதவி சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சைக்காக கொச்சிக்கு உறவினர்களால் அழைத்து செல்லப்பட்டார் ராஜு.
மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் கேப்டன் ராஜு பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று அதிகாலையில் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே அவர் உயிரிழந்ததார். மறைந்த கேப்டன் ராஜுவுக்கு பிரமிளா என்ற மனைவியும், ரவிராஜ் என்ற மகனும் உள்ளனர்.
கேப்டன் ராஜு, ராணுவத்தில் பணிபுரிந்தவர். ராணுவ பணியில் ஓய்வு பெற்ற பின்பு கடந்த 1981-ம் ஆண்டு 'ரக்தம்' என்ற மலையாள படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். தொடர்ந்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு இந்திய மொழிப் படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் ஒரு வடக்கன் வீரகதா, சி.ஐ.டி.மூசா உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தமிழில் தர்மத்தின் தலைவன், சூரசம்ஹாரம், ஜல்லிகட்டு, சின்னப்பதாஸ், ஜீவா மற்றும் ராஜகுமாரன், வேலுசாமி உள்பட பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
கேப்டன் ராஜூ மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.