இயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜோக்கர்’!

அரசியல்வாதிகளாலும் அதிகார வர்க்கத்தினாலும் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை வெளிப்படுத்த முயலும் இந்தப் படம், சுவாரசியமாகவும் வலுவான காட்சிகளுடனும் அமையாதது நம் துரதிர்ஷ்டம்.
இயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜோக்கர்’!

குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் டார்கெட் கொண்ட கமர்ஷியல் படங்களை எடுக்கவேண்டும் என்பதைவிடவும் நல்ல படங்களை இயக்கிக்காட்டவேண்டும் என்கிற எண்ணம் இயக்குநர் ராஜூமுருகனுக்கு உள்ளது. அவருடைய 2-வது படமும் அதே நோக்கத்தில் எடுக்கப்பட்டதே. ஓர் இளம் இயக்குநருக்கு இந்தச் சிந்தனை இருப்பது பாராட்டப்படவேண்டியது.

ஆனால் அரசியல்வாதிகளாலும் அதிகார வர்க்கத்தினாலும் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை வெளிப்படுத்த முயலும் இந்தப் படம், சுவாரசியமாகவும் வலுவான காட்சிகளுடனும் அமையாதது நம் துரதிர்ஷ்டம்.


வீட்டில் கழிப்பறை வசதி இருந்தால் தான் உன்னைக் கட்டிக்கொள்வேன் என்று காதலன் குரு சோமசுந்தரத்திடம் கட்டளையிடும் கதாநாயகி ரம்யா பாண்டியன், பிறகு மனம்மாறி திருமணம் செய்துகொள்கிறார். மத்திய அரசின் இலவசக் கழிப்பறை திட்டத்தின் வழியாக கழிப்பறை வசதி பெற முயற்சி செய்கிறார் கதாநாயகன். ஆனால் அதில் ஏற்பட்ட ஊழலால் அவருடைய வாழ்க்கை திசைமாறுகிறது. மனைவி கோமாநிலைக்குத் தள்ளப்படுகிறார். இதனால் மனநலம் பாதிக்கப்படுகிறார் குரு. பிறகு தன்னை மக்கள் ஜனாதிபதியாக எண்ணிக்கொண்டு ஊரில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கிறார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா என்பதே மீதிக்கதை.


படத்தின் பெரிய பலம் - குரு சோமசுந்தரத்தின் பக்குவமான நடிப்பு. பிளாஷ்பேக்கில் காதலால் ரம்யாவைப் பின்தொடரும் காட்சிகளிலும் பிறகு மனைவிக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்து பதறிப்போகும் காட்சியிலும் நடிகன்யா என்று உணரவைக்கிறார். விருதுகள் இவரைப் பின்தொடரட்டும். ஆரம்பக்கட்ட சோர்வான காட்சிகளுக்குப் பிறகு வருகிற பிளாஷ்பேக் காதல் காட்சிகள்தான் பெரிய ஆறுதல். அதில் புதுமுகம் ரம்யாவும் சிறப்பாக நடித்து குரு சோமசுந்தரத்துக்கு ஈடு கொடுத்துள்ளார். கதாநாயகனின் போராட்டங்களுக்குத் தோள் கொடுக்கும் மு. ராமசாமி, காயத்ரி கிருஷ்ணா ஆகியோரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் குறையின்றி நடித்துள்ளார்கள். பவா செல்லத்துரை சில நிமிடங்களே வந்தாலும் மனத்தில் நிற்கிறார்.

செழியனின் ஒளிப்பதிவு விதவிதமான மனநிலையை உண்டாக்குகிறது. வறட்சியான கிராமத்திலிருந்து சட்டென்று பின்னோக்கிச் செல்லும் காட்சிகளில் கேமராவும் அழகாக கதை சொல்கிறது. இசை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம்.

தன் வீட்டிலும் பள்ளியிலும் கழிப்பறை இல்லை என்பதால் கணவன் வீட்டிலாவது அவ்வசதி கட்டாயமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிற கதாநாயகியின் நிலைமை சமூக அவலத்தைத் தோலுரிக்கிறது. ஆனால் அவருடைய இந்த அடிப்படைத் தேவையே வாழ்க்கையைத் துண்டாக்குவது தாங்கமுடியாத சோகத்தை ஏற்படுத்துகிறது. பிளாஷ்பேக் காதல் காட்சிகளும் அதைத் தொடரும் கதாநாயகனின் பரிதவிப்பும் படத்தின் சிறப்பான பகுதிகள். இங்கு வெளிப்பட்ட இயக்குநரின் நிபுணத்துவம் பிற காட்சிகளில் முழுமையாக இல்லாதது பெரிய குறையாக அமைந்துவிடுகிறது.

சமகால அரசியல் நிலவரங்களைக் கேலியுடன் விமரிசிக்கும் வசனங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். ஆனால் கதாநாயகன் எதற்காக தன்னை மக்கள் ஜனாதிபதியாக எண்ணுகிறார், மக்களும் அந்த மரியாதையை எதற்காக அவருக்கு அளிக்கிறார்கள் என்கிற ஆரம்பக்கட்ட கேள்விகளுக்கு பிறகு விடை தெரிந்தாலும்கூட கதாநாயகனின் துண்டுதுண்டான போராட்டங்கள் மீது ஈடுபாடு உண்டாகவில்லை. வசனங்களை கைத்தட்டி ரசிக்கமுடிவதோடு போராட்டங்கள் மீதான பிடிப்பு முடிவடைந்துவிடுகிறது. தன் சொந்தப் பிரச்னைக்காகவும் கதாநாயகன் நீதிமன்றம் படியேறுவதுகூட நம்மிடம் பாதிப்பை ஏற்படுத்தாது திரைக்கதையின் பெரிய பலவீனம். இறுதியில் நீண்ட வசனம் மூலம் யார் ஜோக்கர் என மக்களைச் சாடும் காட்சி அவசியமா?
இயக்குநரின் நல்ல நோக்கம் நல்ல சினிமாவாகவும் மாறியிருக்கவேண்டும். அரசியல்வாதிகளின் ஊழலைக் குறிவைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் சுவாரசியமாகவும் அமைந்து பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அந்த நிலையை முழுமையாக அடைய ஜோக்கர் தவறிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com