விஜய் ஆண்டனியின் 'எமன்' - சினிமா விமரிசனம்

தனக்கேற்ற திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் விஜய் ஆண்டனியின் புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது.
விஜய் ஆண்டனியின் 'எமன்' - சினிமா விமரிசனம்

துரோகத்தால் வீழ்த்தப்படும் தந்தையின் எம்.எல்.ஏ. கனவை அதே துரோகத்தின் வழியிலேயே மகன் சென்று அடைவது 'எமன்' திரைப்படத்தின் ஒருவரிக்கதை. சாதாரண பின்னணியில் இருந்து கிளம்பும் ஒருவன் எவ்வாறு நிழல் உலகின் சட்ட விரோதங்களையும் அரசியல் உலகின் சாணக்கியத்தனங்களையும் கடந்து சட்டமன்ற உறுப்பினராக மேலெழுகிறான் என்கிற பயணத்தைச் சுவாரசியமாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர். சற்று இழுவையான திரைக்கதையாக அமைந்திருந்தாலும் அரசியல் உலகைச் சுற்றி நிகழும் சூதுகளையும் துரோகங்களையும் அடிப்படையாக வைத்து கட்டப்பட்டிருக்கும் காட்சிகளின் தன்மைதான் படத்தைக் காப்பாற்றுகின்றன. 

தமிழக அரசியல் சூழலில் பரபரப்புகளும் திருப்பங்களும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் பொருத்தமான நேரத்தில் வந்திருக்கும் இந்த அரசியல் திரைப்படம் இன்னமும் துணிச்சலான காட்சிகளுடனும் சுவாரசியத்துடனும் இறங்கி அடித்து ஆடியிருந்தால் முக்கியமான படமாக இருந்திருக்கும்.

***

திருநெல்வேலியின் பின்னணியில் படம் தொடங்குகிறது. நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் விஜய் ஆண்டனியின் தந்தைக்கு எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பு உருவாகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.-வின் மகனால் இந்தக் குறுக்கீட்டைச் சகிக்க முடியவில்லை. எனவே விஜய் ஆண்டனியின் திருமணத்தைச் சாதிப்பிரச்னையாக்கி அந்தக் குழப்பத்தில் அவரைச் சாகடிக்கிறார். குடும்பப் பிரச்னையில் நிகழ்ந்த பரஸ்பர கொலை என்பது போன்ற நாடகத்தை உருவாக்குகிறார்.  

தன் தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்கும் விதத்தில் வில்லன் உபயோகப்படுத்திய அதே பாணியை தானும் உபயோகப்படுத்தி அந்தப் பாதையின் வழியாக வில்லனை அடைந்து மகன் பழி வாங்குகிறான். எம்.எல்.ஏ-வாகவும் ஆகிறான். 

***


தனக்கேற்ற திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் விஜய் ஆண்டனியின் புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது. அவருக்கென்று உருவாகி வரும் சந்தை மதிப்பை தக்கவைத்துக்கொள்ளவும் மெல்ல நகர்ந்து முன்னேறவும் இந்தத் திரைப்படம் நிச்சயம் உதவும். 

வெளியே சாதுவான தோற்றத்தில்  தெரிந்தாலும் சமயம் வரும்போது எதிராளியின் மீது பாயும் விஜய் ஆண்டனியின் வழக்கமான பாத்திர அமைப்பு இந்த திரைக்கதைக்கு உதவுகிறது. ஆனால் இதுவே தொடர்ந்து பலனளிக்கும் என்று உத்திரவாதமில்லை. அவரது தோற்றமும் தோரணைகளும் பாத்திரத்துக்கு ஏற்ப பொருத்தமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சண்டைக்காட்சிகளில் நல்ல முன்னேற்றம். நடனக்காட்சிகளில் சொதப்புகிறார். தந்தை - மகன் என்று இரண்டு பாத்திரத்திலும் விஜய் ஆண்டனி. எந்த வித்தியாசமும் இல்லை. நல்ல வேளையாக அப்பா விஜய் ஆண்டனி பாத்திரம் முதல் சில நிமிடங்களிலேயே சாகடிக்கப்பட்டு விடுவதால் நாம் பிழைத்து விடுகிறோம். 

நாயகனாக முன்னேறி வரும் அதே சமயத்தில், ஓர் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. எந்தப்பாடலும் ரசிக்கும்படியாக இல்லை. திரைக்கதையில் பாடல்களும் அசந்தர்ப்பமான நேரங்களில் வந்து பொறுமையைச் சோதிக்கின்றன. ஆனால் சாமர்த்தியமான பின்னணி இசையின் மூலம் இதைச் சமன் செய்துவிடுகிறார். 

நாயகி மியா ஜார்ஜூக்கு பெரிதாக வாய்ப்பில்லை. படத்திலும் நடிகையாக வரும் இவர் எதிர்கொள்ள நேரும் பாலியல் சீண்டல், சமகால துயரச் சம்பவம் ஒன்றை நினைவுப்படுத்துகிறது. இவருக்கும் விஜய் ஆண்டனிக்கும் உருவாகும் காதல், கண்ணியத்துடன் அமைந்திருக்கிறது. இந்த விஷயத்தில் விஜய் ஆண்டனி, எம்.ஜி.ஆரையே மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது. படம் ஏறத்தாழ அதன் இறுதிப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போது 'அடடே.. எந்தவொரு டூயட்டும் இல்லாமலேயே எடுத்திருக்கிறார்களே' என்று வியந்துகொண்டிருக்கும் நேரத்தில் பொறுமையைச் சோதிக்கும் ஒரு பாடல் காட்சி சரியாக வந்து நிற்கிறது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியாகராஜன் தமிழ்த் திரைக்கு வந்திருக்கிறார். ஏறத்தாழ அதே தோற்றத்தில் நீடிக்கும் இளமை ஆச்சரியத்தைத் தருகிறது. தோற்றத்தில் மாற்றமில்லாததைப் போலவே நடிப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. இயக்கி விடப்பட்ட ரோபோ போலவே பேசுகிறார். 'என்னமாக நடித்திருக்கிறார்' என்று நிச்சயம் சிலர் பாராட்டுவார்கள். 

அமைச்சர் தங்கபாண்டியனாக நடித்திருப்பவரின் பங்களிப்பு சில இடங்களில் மிகையாக இருந்தாலும் பல காட்சிகளில் கவனிக்கத்தக்க அளவில் சிறப்பாக அமைந்திருந்தது. திருநெல்வேலி வட்டார வழக்கை இயன்ற வரையில் காப்பாற்றியிருக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும் சார்லியின் நடிப்பு இயல்பு. இது தவிர சங்கிலி முருகன், சுவாமிநாதன், மாரிமுத்து  உள்ளிட்ட சிலபல பாத்திரங்கள்.

***

வழக்கமான அரசியல் திரைப்படங்களின் சாயல் இருந்தாலும், இயக்குநர் ஜீவா சங்கர் திரைக்கதையை கையாண்டிருக்கும் வித்தியாசமே இந்தப் படத்தைக் காப்பாற்றுகிறது. தொடக்கக் காட்சியில் வில்லன் பின்பற்றும் அதே சூழ்ச்சியையே நாயகனும் படம் முழுக்கவும் பின்பற்றுகிறான். இறுதிக் காட்சியைத் தவிர அவன் நேரடியாக எவரையும் கொல்வதில்லை. தன்னுடைய எதிரிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தை மட்டுமே உருவாக்குகிறான். இந்த வித்தியாசமான டிரீட்மெண்ட் கவர்கிறது. 

அரசியல் திரைப்படமென்பதால் படம் முழுவதும் எவரையாவது எவராவது துரோகித்துக்கொண்டே இருக்கிறார்கள். முடிவே இல்லாத இந்தத் துரோகத்தின் பாதை ஆயாசத்தை தருகிறது. படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சில சம்பவங்கள், தமிழக அரசியலை நினைவூட்டுகின்றன, அல்லது அரங்கிலுள்ள பார்வையாளர்கள் அவ்வாறுதான் புரிந்துகொள்ள விரும்புகிறார்கள். சில இடங்களில் வசனங்கள் அபாரமாக அமைந்திருக்கின்றன. 'அரசியலில் எதிரி நேரெதிராக இருக்கமாட்டான். நம் பக்கத்திலேயே விசுவாசமானவாக தோற்றமளிப்பான்' என்பது போன்ற சாணக்கியத்தனமான வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. 

ஒரு திட்டமிட்ட அரசியல் கொலை நடக்கிறது. ஆனால் ஊடகங்களில் அது விபத்தாக பதிவாகிறது. விஜய் ஆண்டனி, அதிர்ச்சியுடன் இது குறித்து கேட்கும் போது 'சில உண்மைகள் பொய்யாக வெளிப்படும்போது நாமும் அதை பொய்யாகவே நம்பிவிடவேண்டும். அப்போதுதான் மனச்சாட்சி உறுத்தல் இல்லாமல் இருக்கமுடியும்' என்று  தியாகராஜன் பாத்திரம் பதிலளிக்கிறது. நம் அரசியல்வாதிகள் பொதுவெளியில் எவ்வாறு சிரித்த முகத்துடன் பொது வெளியில் உலா வருகிறார்கள் என்பது நினைவுக்கு வருகிறது. 

வெளிப்பார்வைக்கு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எலியும் பூனையுமாகக் காட்சியளித்தாலும் பலவிதமான உள்பேரங்களில் எவ்வாறு ரகசியக் கூட்டணியாக இணைந்திருக்கிறார்கள் என்பதை சார்லி விளக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது. உண்மையில் இந்த விஷயம்தான் இந்தப் படத்தின் மையம் என்றுகூட சொல்லி விடலாம். 

***

திரைக்கதை இந்தத் திரைப்படத்தின் பலம் என்றால் காட்சிகள் உருவாக்கப்பட்ட விதம் பலவீனமாக இருக்கின்றன. பெரிதாக எந்தவொரு புதுமையும் இல்லை. போலவே இவற்றில் நம்பகத்தன்மையும் இல்லை. எவ்விதப் பின்புலமும் இல்லாமல் நாயகன் எவ்வாறு தனியாளாக தன் மீதுள்ள சிக்கல்களைச் சமாளிக்கிறான் என்கிற கேள்வி எழுந்து கொண்டேயிருக்கிறது. தியாகராஜனின் பாத்திர வடிவமைப்பு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பல சம்பவங்களின் காரணகர்த்தாவாக, பலமுள்ள மூளைக்காரராக இருப்பவர் எம்.எல்.ஏ. வாய்ப்புக்காக விஜய் ஆண்டனியிடம் தோற்பது நம்பும்படியாக இல்லை. நாயகனுக்கு ஏன் எமன் என்கிற பட்டப்பெயர் என்பதற்கும் படத்தின் தலைப்புடன் எவ்வாறு அது பொருந்துகிறது என்பதற்கும் போதுமான அளவு அழுத்தம் தரும் காட்சிகள் அமையவில்லை. 

இறுதிக்காட்சியில் நாயகனுக்கு ஏற்படும் ஒரு சிறிய திடுக்கிடல் ரசிக்க வைக்கிறது. அடுத்த பாகம் தொடர்வதற்கான சமிக்ஞையை தருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com