தேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்!

தேவதாசியின் கதைகளில் ஒரு சிறு துளியை பதிவு செய்யும் முயற்சிதான் நித்யசுமங்கலி குறும்படம். தேவதாசிகள் கதை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டே வருகிறது. 
தேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்!

தேவதாசியின் கதைகளில் ஒரு சிறு துளியை பதிவு செய்யும் முயற்சிதான் நித்யசுமங்கலி குறும்படம். தேவதாசிகள் கதை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டே வருகிறது. ஆனால், அவர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெங்களூரைச் சேர்ந்த தமிழரான இளம்பெண் லட்சுமி பூஜா

இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

நித்யசுமங்கலி பெயரே இந்தக் கதைக்கு அழுத்தத்தை கொடுக்கிறது.

சரி கதைக்கு வருவோம். 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு தேவதாசியின் கதையை ஆவணப்படமாக பதிவு செய்யும் நோக்கத்தில் ஆவணப் பட இயக்குநர் ஒருவர் நண்பரை அழைத்துக் கொண்டு தேவதாசி வசித்த இடத்துக்குச் செல்கிறார். அவருடன்,  தொல்லியல் துறை ஆராய்ச்சியாளரான இளம்பெண் ஒருவரும் உடன் செல்கிறார்.

அந்தக் கிராமத்தில் தேவதாசி வாழ்ந்த இல்லத்துக்கு அவர்கள் மூவரும் செல்ல, தொல்லியல் துறை ஆராய்ச்சியாளருக்கு ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது. தன்னை யாரோ கொலை செய்வது போல் கனவு கண்டதாக உடன் வந்தவர்களிடம் கூறுகிறார். பின்னர், அந்த ஊரில் இருக்கும் மனோதத்துவ மருத்துவரிடம் சென்று தனக்கு ஏன் இதுபோன்ற கனவு வருகிறது என ஆராய முயற்சி செய்கிறார்.

அதன்மூலம், அவரது முன்ஜென்மத்துக்கு கதை பயணிக்கிறது. அதில், அவர்கள் தேடிவந்த தேவதாசியின் கதை விரிகிறது.

அது என்ன கதை, தேவதாசிக்கு என்ன நடந்த்து என்பதே இந்தக் குறும்படம். தேவதாசிக்கு நேரும் முடிவு நமக்கெல்லாம் அதிர்ச்சியை அளிக்கும்.

முந்தைய கால வாழ்க்கையை மிகவும் அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் லட்சுமி பூஜா.   தேவதாசி பாத்திரத்தில் ஜான்வி ஜோதி சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவர் ஒரு காட்சியில் நவரச முகபாவனைகளை வெளிப்படுத்தும் இடம் அவர் திறமையான நடிகை என்பதை வெளிப்படுத்துகிறது.

மன்னராக வரும் சந்துருவும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். இதர கதாபாத்திரங்களின் நடிப்பில் செயற்கைத்தனம் வெளிப்படுவதை தவிர்க்க இயலவில்லை. அனைத்து கதாபாத்திரங்கள் மீது இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இருப்பினும், தான் சொல்ல வந்த கதையை மிகவும் அழகாக பார்வையாளர்களுக்கு கடத்திய விதத்தில் லட்சுமி பூஜா சிறந்த இயக்குநராக மனதில் பதிகிறார்.

படத்தொகுப்பும், ஒளிப்பதிவும் சிறப்பு. இயக்குநரின் எண்ணத்துக்கு கேமரா கண்கள் வழியாக அழான காட்சிகளை பதிவு செய்திருக்கிறார் ஜோசஃப் ராய்.

பின்னணி இசை படத்துக்கு உயிர். இசையமைப்பாளர் கீர்த்தி வாசனுக்கும், வசனங்களை எழுதியிருக்கும் ஏ.பி.ராஜாவுக்கும் வாழ்த்துகள். வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

இயக்குநர் லட்சுமி பூஜாவை தொடர்புகொண்டு பேசினேன். யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல் சினிமா மீது இருந்த ஆர்வத்தில் இந்தப் படத்தை உருவாக்கியதாகத் தெரிவித்தார்.

பள்ளிப் படிப்புக்கு பிறகு நுண்கலை கல்வியில் தேர்ச்சி பெற்றுள்ள லட்சுமி பூஜாவுக்கு கலை துறையின் மீது ஆர்வம் பிறந்ததில் ஆச்சரியமில்லை.

மும்பையில் நடைபெற்ற குறும்பட விழா ஒன்றில் இந்தப் படத்தை திரையிட்ட லட்சுமி பூஜாவுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்துக்கு சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு கிடைத்தாலும், சில எதிர்ப்புகளையும் இவர் சம்பாதித்து இருக்கிறார்.

இதுகுறித்தும், படத்தை உருவாக்கிய விதம் குறித்தும் லட்சுமி பூஜா கூறியதாவது:

 இந்தப் படத்துக்கு சில எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. இருப்பினும், நான் பதிவு செய்ய நினைத்ததை சரியாக செய்திருக்கிறேன் என்ற மன திருப்தி எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எனது தாயார் அன்னபூரணி. எனக்கு ஆதரவு தந்துவரும் தந்தை புருஷோத்தமுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மூன்று தினங்களில் படப்பிடிப்பை முடித்தாலும், படத்தொகுப்பு, டப்பிங், விஷுவல் எஃபக்ட்ஸ் போன்றவற்றை செய்ய சில மாதங்கள் ஆகிவிட்டன.

நண்பர்கள் செல்வ குமார், பிரவீண் ஆகியோருக்கும், இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் எனது நன்றிகள் என்று கூறிய அவரிடம் எதிர்கால திட்டம் குறித்து கேட்டேன்.

விரைவில் தமிழ் திரையுலகில் தடம்பதிக்க வேண்டும் என்பதே லட்சியம் என்றும் அடுத்த படத்துக்கான கதை உருவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்றும் கூறினார்.

பல நல்ல படங்களை உருவாக்க அவருக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com