துபாய் வாழ் தமிழர்களின் நிலையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் படம் "அரபு தாக்கு.' நிகேஷ் ராம், பெர்குஸார் கொரல், தம்பி ராமையா, ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். துபாய் நாட்டை கதைக்களமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படம் இது. தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலை தேடி துபாய்க்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும் பாட்டையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படி சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் சொல்லுவதே திரைக்கதை. இதுவரை சிங்கப்பூர், மலேசிய தமிழர்களின் பின்புலத்தை கதைக் களமாகக் கொண்டு படங்கள் வருவது வழக்கம். அதிலிருந்து மாறுபடும் வகையில் துபாய் வாழ் தமிழர்களின் நிலை இதில் சொல்லப்படுகிறது. துபாயின் நவீன அடையாளமான புர்ஜ் கலிபா என்ற இடத்தில் முதன் முதலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டடங்கள் மிகுந்து காணப்படும் துபாய் ஷேக் சாயீத் சாலையிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஷார்ஜா, அபுதாபி என ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரான்ஸிஸ் எழுதி இயக்குகிறார்.