சமீபத்தில் வெளியான படங்களில் குறிப்பிடத்தகுந்த வரவேற்பை பெற்றுள்ள படம் "டோரா.' நயன்தாரா முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த இப்படத்தின், மற்றுமொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்த புதுமுகம் ஷான். பவன் சர்மா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இவர். அவரது சினிமா பிரவேசம் குறித்து பேசுகையில்.... "கோவைதான் சொந்த ஊர். பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் படிப்பு முடித்து விட்டு நடிப்பதற்காக முயற்சி செய்தேன். பல தேடல்களுக்கு பின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் "மீண்டும் ஒரு காதல் கதை' படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே, "தங்கமகன்' படத்தில் எமி ஜாக்சனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து "கோ 2'-வில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது "டோரா' படத்தின் மூலம் கிடைத்திருக்கும் வெளிச்சம் மிகப் பெரியது. பாராட்டியவர்களுக்கு நன்றி. அடுத்து புதுமுகம் சுஜோ சுந்தர் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறேன். இப்படம் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது. வில்லன் வேடங்கள் மீது அவ்வளவு ப்ரியம். ரகுவரன் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது என் ஆவல்'' என்றார் ஷான்.