சென்னை தியாகராயர் நகர், பாண்டி பஜாரில் மறைந்த நடிகர் நாகேஷுக்குச் சொந்தமான ஒரு திரையரங்கம் இருந்தது. நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரிலேயே அது இயங்கி வந்தது. 1984-ஆம் ஆண்டு இந்த திரையரங்கத்தை திறந்து வைத்தவர் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். 2008-ஆம் ஆண்டு அந்த திரையரங்கம் மூடப்பட்டு திருமண மண்டபமாக மாற்றப்பட்டது. இந்த திரையரங்கத்தை மையமாகக் கொண்டு தற்போது "நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. நெடுஞ்சாலை ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', "இனிமே இப்படித்தான்' படங்களில் நடித்த ஆஸ்னா சவேரி கதாநாயகியாக நடிக்கிறார். பானுப்பிரியா, காளி வெங்கட், லொள்ளு சபா சாமிநாதன், சித்தரா, லதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்கிறார்கள். ட்ரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்துடன் இணைந்து என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இசாக் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இதற்கு முன்பு அகடம் என்ற படத்தின் மூலம் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.