ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக படத் தலைப்புகளில் வித்தியாசம் காட்டுவதை இயக்குநர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இதற்காக வழக்கு நடையில் இல்லாத வார்த்தைகளை தேடிப் பிடிக்கிறார்கள். இந்த வரிசையில் பெயர் வைக்கப்பட்டுள்ள படம் "கோம்பே.' தேங்காயில் இருந்து தேங்காயையும் நீரையும் எடுத்த பின் கீழே போடப்படும் கூட்டைத்தான் கோம்பே என்பார்கள். சார்லஸ், தீர்த்தா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு செய்வதுடன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஹாபிஸ் இஸ்மாயில். படம் குறித்து அவரிடம் பேசுகையில்... "கோம்பே' என்றால் வெற்றுக் கூடு என்று பொருள் படும். இப்போது நாட்டில் நடக்கிற சம்பவங்களை பார்க்கும் போது மனித வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. கொலைகளும், தாக்குதல்களும் அதிகரித்து விட்ட நிலையில், மனித உயிருக்கு மரியாதை இல்லை. இதுதான் இந்த கதையின் மையம். தேனியில் வாழும் ஓர் இளைஞன், காசுக்காக எதையும் செய்யத் துணிபவன். அவனது வாழ்க்கையை சொல்வதுதான் திரைக்கதை. காசுக்காக கொலைகூட செய்பவனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவள் அவன் வாழ்வை மாற்ற முயல்கிறாள் அதனால் ஏற்படும் சம்பவங்கள்தான்'' படம் என்கிறார் இயக்குநர்.