மனித மன உளவியல் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் "பிரகாமியம்.' பார்வதி, சுபா, ரகுமான், வாசுதேவன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். கதையின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதுடன் படத்தையும் எழுதி இயக்குகிறார் பிரதாப். படம் குறித்து பேசுகையில், "நிலநடுக்கம் அது கொடுமை. மன நடுக்கம் அது மிகக் கொடுமை... என மறைந்த நா.முத்துக்குமார் ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதுதான் இந்தக் கதைக்கான முதல் புள்ளி. ஆழ்மன உலகத்தில் நிகழும் காதல்தான் இதன் களம். தந்தை - மகன் இருவருக்குமான சம்பவங்களை உலக அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் நிகழும் சம்பவங்களாக சம்பந்தப்படுத்துவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்புகளில் ஒன்று. கலை, ஆவணம், கமர்ஷியல் என மூன்று வகையான கதை சொல்லும் யுக்திகள் இதில் கையாளப்பட்டுள்ளன. தணிக்கைக்கு படத்தை திரையிட்டபோது படத்துக்கு "எஸ்' சான்றிதழ் வழங்குவதாக அதிகாரிகள் கூறினர். அதன்படி சைகாலஜி டாக்டர் ஒருவரின் துணையுடன் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று பொருள். இறுதியாக சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதால் படத்துக்கு "ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றார் பிரதாப்.