'காஷ்மோரா' படத்தைத் தொடர்ந்து கோகுல் எழுதி இயக்கும் படத்தில் நடிப்பதற்காக விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது "ஜுங்கா' எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை தானே தயாரித்து, நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. இது குறித்து இயக்குநரிடம் பேசும் போது, "இதற்கு முன் இருவரும் இணைந்த "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் வசூல்ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. அப்போதே மீண்டும் இருவரும் இணையும் சூழல் வந்தால் இணையலாம் என்று விஜய்சேதுபதி சொல்லியிருந்தார். அதன் படி இந்தக் கதையை அவருக்கு சொல்லியிருந்தேன். முழுக்கதையையும் கேட்டுவிட்டு, சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு "இதை நானே தயாரிக்கிறேன்' என்றார். இதை என் கதைக்கு கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன். அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருக்கும். அதனால் வேறு தயாரிப்பாளரைக் காட்டிலும் நாமே தயாரிப்பது தான் பொருத்தமானது என்று கூறி அவரே தயாரிக்கிறார். கதாநாயகியாக சாயிஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.