மெமரீஸ் ஆஃப் மர்டரும் ஒபன் எண்டிங் திரைப்படங்களும்!

க்ரைம் த்ரில்லர் எனப்படும் புதிரும் ரகசியங்களும் நிறைந்த திரைப்படங்களை காண்பதில் பெரியளவில் எனக்கு விருப்பமுண்டு.
மெமரீஸ் ஆஃப் மர்டரும் ஒபன் எண்டிங் திரைப்படங்களும்!

க்ரைம் த்ரில்லர் எனப்படும் புதிரும் ரகசியங்களும் நிறைந்த திரைப்படங்களை காண்பதில் பெரியளவில் எனக்கு விருப்பமுண்டு. ஆல்பிரட் ஹிட்ச்காக், ஸ்டான்லி குப்ரிக், மார்டின் ஸ்கார்ஸ்ஸி போன்ற திரையுலக மேதைகள் சிருஷ்டித்த பல க்ரைம் த்ரில்லர்களை பார்த்து ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு இயக்குனருக்கும் தங்களுக்கே உரித்தான திரைபாணியில் என்னை அச்சப்படுத்தவும், ஆச்சரியம் கொள்ளவும் செய்திருக்கிறார்கள். 

ஹிட்ச்காக் படங்களில் சிறிய உணவக காட்சிக்கூட அதிகளவில் அழுத்தம் தரக் கூடியதாக, மனம் நடுங்கச் செய்வதாக அமைக்கப்பட்டிருக்கும். ஸ்கார்ஸ்ஸி வித்தியாசமான காட்சியமைப்புகள் மற்றும் குற்றவியல் சமூகத்தினிடையிலிருந்து கதைப் பிடித்தல் போன்றவைகளால் என்னளவில் தனி கவனம் பெறுகிறார். குப்ரிக் படங்களில் ஒவ்வொரு காட்சி சட்டகத்திலும் கச்சிதம் இருக்கும். அதில் இடம்பெறும் மனிதர்களின் சிறுசிறு பாவனைகள், அதீதமான இறுக்கம் முதலியன எப்போதுமே திகைப்படைய செய்கின்ற வகையாக இருக்கும். என் விருப்பத்திற்கு இயக்குனரும் ஸ்டான்லி குப்ரிக்தான். ஆனால், திரைப்படங்களில் க்ரைம் திரில்லர்களுக்கு பெயர் பெற்றவை கொரிய சினிமாக்கள்.

எழுத்தில் க்ரைம் த்ரில்லர் வகைமையை கையாண்டவர்களில் அகதா கிருஸ்டி என்னை பெரிதும் வசீகரித்தவர். அவரது நாவல்களில் "AND THEN THERE WERE NONE" என்னை முழுவதுமாக சுறுசுறுப்பாக வாசிக்க செய்த நாவல். கிட்டதட்ட 290 பக்கங்களில் அடங்கும் அந்த நாவலின் இறுதி பத்து பக்கங்களை ஒருவர் படிக்க தவறிவிட்டால், நிச்சயமாக அவர்  நிம்மதியிழப்பிற்கு உள்ளாக நேரிடும். அவ்வளவு புதிர் நிரம்பிய இறுக்கமான சம்பவங்களால் வாசகனை உள்ளிழுத்துச் செல்லும் நாவலது.

AND THEN THERE WERE NONE  நாவலைத் தழுவி, பிரெஞ்சு இயக்குனரான க்ளையர் அதே பெயரில் 1945-ல் இயக்கிய கறுப்பு வெள்ளை படமொன்றை பார்த்திருக்கிறேன். நாவலின் முடிவிலிருந்து முற்றாக விலகி, சினிமாவுக்கு ஏற்றதாய் மிகமிக செயற்கையாய் சுரத்திலாமல் அப்படத்தை முடித்திருந்ததால், எனக்கு அப்படம் துளியும் பிடிக்கவில்லை. அதேபோல, 2003ல் அமெரிக்க இயக்குனர் ஜேம்ஸ் மேங்கோல்டு  எடுத்த IDENTITY படமும் அகதாவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டதே. 

OPEN ENDING-ஆக நிறுத்தப்பட்டு, முடிவு எழுப்பப்படாத பல க்ளாசிக்கல் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். என்னை அழவும், பரவசப்படுத்தவும், நடுக்கமுறவும் செய்தவை அத்தகைய OPEN ENDING திரைப்படங்கள். முடிவை கோரும்  நிலைக்கொள்ளாத மன நிலையை உருவாக்கும் அப்படங்கள், நமக்கும் அவைகளுக்குமாய் அரூப உறவொன்றை நெய்ந்து கொள்கின்றன. THE VIOLIN, THE ARTIST AND THE MODEL, IN THE MOOD FOR LOVE முதலியவை சமீபத்திய உதாரணங்கள்.  இதில் அமானுஷ்ய வகையறாவை சேர்ந்த படங்களை நான் சேர்த்துக்கொள்ளவில்லை. அவை பெரும்பாலும் OPEN ENDINGஆகவே

இருந்தாலும், ஒரு படத்திற்கே உரிய முழுமையை அவை பெற்றிருக்கும், இவ்வகையிலான திரைப்படங்கள் மறு பாகத்துக்கான திட்டமிடலோடு உருவாக்கப்படுகின்றன. அதன் முடிவு முடிவின்மை குறித்து எவருக்கும் எவ்வித ஈடுபாடும் இருக்கப் போவதுமில்லை.

சமீபத்தில் பார்த்து ரசித்த தென் கொரிய இயக்குனரான BONG - JOON - HOவின் தொடர் கொலைகளை பற்றியதான MEMORIES OF MURDER அவ்வாறான OPEN ENDINGயுடன் முடிவடையும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமே. ஒரு ஒதுக்குப்புறமான தென் கொரிய கிராமத்தில் வரிசையாக பத்து பெண்களை கொல்லப்படுவதும், கொலையாளியை தேடியலையும் மூன்று காவலதிகாரிகளையும் முன்னிறுத்தி நகரும் இத்திரைப்படம், கொலைக்கான சில குறிப்புகளை நம் முன்னால் விரித்து, கொலைகாரனையும் நாமே தீர்மானிக்கும்படியாக சொல்லி முடிகிறது. இருளும் காற்றும் படம் நெடுகிலும் நிரம்பி குமிழும் இப்படத்தை BONG JOON HO மிக மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

முதற்காட்சியில், சிறு ஓடை ஒன்றின் அடியில் பிணத்தை இழுத்தெடுக்கும் காவலதிகாரி அவ்வழக்கு முடிக்கபடாமல் நின்றுவிட, வருடங்கள் பல கடந்து தொழிலதிபராக இறுதிக்காட்சியில் அதே சிறு ஓடையின் அடியில் வந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, அங்கு வரும் ஒரு சிறுமி “அங்கிள் என்ன பண்றீங்க..” என்கிறாள். ஓடையின் அடியில் பிரேதமேதும் இல்லாததால், ஆசுவாசமுறும் அவர், சிறுமியின் பக்கம் திரும்பி “பல வருஷங்களுக்கு முன்னாடி எனக்கு இங்க ஒரு வழக்கு இருந்தது..” என்று மூச்சிழுத்து சொல்ல, உடனே அச்சிறுமி “கொஞ்ச நேரம் முன்னாடி அந்த ஓடையை வேறொரு அங்கிள் பாத்துக்கிட்டு இருந்தாரு... அவரும் எனக்கு ரொம்ப வருஷம் முன்னாடி இங்க ஒரு வழக்கு இருந்துச்சுன்னு சொன்னாரு..” என்று சொல்லி நிறுத்த, உடல் குலுங்க, முகத்தில் அதிர்ச்சியுடன் அவர் நம்மை பார்த்தபடி இருக்க, படம் முடிவடைந்துவிடுகிறது. 

BONG JOON HO இக்காட்சியின் மூலம், அந்த முன்னாள் காவலாளியை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறார். அவன் முகத்தில் உறையும் குருதியே அதற்கு சாட்சி. அதே நேரத்தில், கொலையாளிகள் எப்போதும் நம்மை சுற்றித்தான் எப்போதும் இருந்து வருகிறார்கள். நாம்தான் கவனக்குறைவால் அவர்களை யூகிக்க இயலாமல் தவறவிட்டுவிடுகிறோம் என்பதாகவும் அக்காட்சி எனக்கு புலனாகியது. அதேபோல, கொலை செய்யப்பட்டவர்கள் யாவரும் பெண்களே. இறுதிக்காட்சியில் ஒரு சிறுமியை முன்னாள் காவலாளியிடம் பேசச் செய்து, கொலைக்காரன் இன்னமும் சுதந்திரத்துடன் உலாவுவதையும், காவலதிகாரி தன் வழியே அவ்வழக்கை முடிக்க இயலாமல் சென்றுவிட்டதையும், அந்த நகரத்தில் பெண்களின் பாதுக்காப்பின் நிச்சயத்தையும் கேள்வி எழுப்பியபடி முடிக்கிறார். OPEN ENDINGஆக நிறைவுறும் சினிமாக்களின் தனித்துவமே இதுதான். அவை வாழ்க்கையைப் போலவே முடிவை நம் கண்ணுக்கு துலங்க செய்யாமல் காலத்தினுள் பொதித்துவைத்து, முடிவை நோக்கி நம்மை இழுத்துச்செல்லும் எண்ணற்ற கிளைகளை மட்டுமே நாம் பற்றிட வழிவகை புரிகிறது.

முடிவையும், புரிதலையும் இப்படியாக பார்வையாளனின் யூகத்திற்கே விட்டிருக்கும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியின் சட்டகமும் கச்சிதமாய் உருவாக்கப்பட்டுள்ளது. கொலைக்காரனென்று தவறாய் வேறொருவனை துரத்திச் செல்லும் காட்சியில் காவலர்கள் முன்னால் தாவி ஓட, கேமரா பின்னகர்ந்து அவர்கள் தவறான பாதையில் வழக்கை நகர்த்துக்கிறார்கள் என்பதை சிரமமின்றி எளிதாய் சொல்கிறது. இப்படியான காட்சிகள் படம் நெடுகிலும் உண்டு.

கொலைக்கான குறிப்புகளாக, கொலை நிகழ்வுறும் நாளிலெல்லாம் தவறாமல் மழைப் பெய்வதும், கொலைச் செய்யப்படும் பெண்கள் சிகப்பு நிற உடையணிந்திருப்பதும், சோக பாடல் ஒன்று வானொலி நிலையமொன்றில் மீண்டும் மீண்டும் ஒலிப்பரப்பப்படுவதும் என மிக சிறப்பாக திரைக்கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. KIM JEE WOON-க்கு பின், BONG JOON HOவும் வசியப்படுத்தும் தென்கொரிய இயக்குனராக எனது விருப்ப இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com