ஜோதிடம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்
கே.சி.எஸ்.ஐயர், சென்னை
எனது மகனுக்கு 34 வயது ஆகிறது. எம்.சி.ஏ. படித்துள்ளான். அவனுக்குத் திருமணம் நடைபெற்றபோது சாஃப்ட்வேர் கம்பெனியில் என்ஜினியராகப் பணிபுரிந்தான். தற்போது ஒன்றரை வருடங்களாக வேலையில்லாமல் இருக்கிறான். இதனால் ஊராரின் பேச்சுக்கும், ஏச்சுக்கும் ஆளாகியுள்ளான். இதன் காரணமாக குடும்பத்திலும் அடிக்கடி சண்டை ஏற்பட, மனம் வெறுத்துப்போய் இருக்கிறான். என் மகனின் ஜாதகப்படி, சனிப் பிடித்துள்ளதால்தான் இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஜோசியர் கூறுகிறார். இது சரியா? எப்போது அவனுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும்? குழந்தைப் பாக்கியம் உண்டாகுமா? என் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?
பெயர் வெளியிட விரும்பாத மணப்பாறை வாசகி.
உங்கள் மகனுக்கு மேஷ ராசி. பரணி நட்சத்திரம். அவருக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதத்திலிருந்து சனி பகவான் பலம் பெற்ற சுப ஸ்தானமான ஆறாம் இல்லத்திற்குப் பெயர்ச்சி ஆகியுள்ளார். இதை எந்த ஜோசியரும் குறை என்று கூறமாட்டார். மேலும் கஷ்டம் வந்துவிட்டால் சனி பகவானின் மேல் பழி போடக்கூடாது. நாம் அனைவரும் நவ (ஒன்பது) கிரகங்களின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளோம். சனி பகவானை ஜோதிடத்தில் "நீதிமான்' என்று கூறுகிறார்கள். எப்படி நீதிபதி தவறு செய்தவர்களுக்கு அவர்களின் குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை வழங்குகிறாரோ அதேபோல் சனி பகவானும் நம் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர் தசையிலோ, புக்தியிலோ, ஏழரை நாட்டுச் சனியிலோ, அஷ்டம மற்றும் அர்தாஷ்டம சனிக் காலங்களிலோ, நன்மை - தீமைகளை வழங்கி சூழ்நிலைகளை மாற்றி அமைத்து நம்மைச் செம்மைப்படுத்துகிறார். இத்தகைய காலகட்டங்களில் ஏற்படும் அனுகூல/ பிரதிகூல சூழ்நிலைகளை நாம் ஏற்றுக் கொண்டு நம் முயற்சிகளை வேறு திசையில் செலுத்த வேண்டும். நாம் இப்படித்தான் இந்தப் பாதையில்தான் செல்ல வேண்டும், மாற்றுப் பாதையில் செல்லக்கூடாது என்று பிடிவாதமாக இருந்து, நம்மை மாற்று வழியில் திருப்பிச் செலுத்த அவர் செய்யும் வேலைகளை தண்டனையாக நினைக்காமல் இருக்க வேண்டும். அத்தகைய நிதர்சனத்தை உணர்ந்த பிறகு நாம் செய்யும் மாற்று முயற்சிகளுக்கு சனி பகவான் உறுதுணையாக நிற்கிறார். பலருக்கு ஏழரை நாட்டுச் சனிக் காலத்தில் திருமணம், குழந்தைப்பேறு, ஸ்திரச் சொத்து வாங்குதல், பதவி உயர்வு, முக்கியமாக வெளிநாட்டுப் பயணம் ஆகியவை கிடைப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
ஏன், பலர் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் போன்ற பதவிகளையும் அடைகின்றனர். எவரும் தமக்கு இது போன்ற நன்மைகள் ஏழரை நாட்டுச் சனியில் நடக்கும் போது சனி பகவானைப் புகழ்வதில்லை. மேலும் வெளியிலும் சொல்வதில்லை; அவரை பூஜிப்பதும் இல்லை. அதேநேரம் சிறிது கஷ்டம் வந்தால்கூட அவரை ஏசத் தொடங்குகிறார்கள். இச்சமயங்களில் அவரை எள் தீபமேற்றி வழிபட்டு வர வேண்டும். "மக்கள் சேவையே மகேசன் சேவை, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்கிற வழக்குகளுக்கு ஏற்ப, ஏழை எளிய மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். மேலும் தன்னலமற்ற தொண்டாற்றுபவர்களையும் சனி பகவானுக்குப் பிடிக்கும். அவர் நலம் புரிவதிலும், தண்டனை கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டாதவர். "கடவுள் இல்லை' என்று நாத்திக வாதம் பேசுபவர்கள் ஏனைய கடவுள்களை அவமதித்து நடந்து கொண்டாலும் சனி பகவானை ஏசிப் பேசத் துணிவதில்லை என்பது கவனிக்கத் தக்கது. "நம்மை எவரும் தண்டிக்க முடியாது' என்று இறுமாப்பு கொண்டு பஞ்சமஹா பாதகச் செயல்களில் ஈடுபடுபவர்களை தன் ஆதிக்கக் காலத்தில் இடறி விழவைத்து, இருட்டில் செய்த தவறுகளுக்கெல்லாம் வெட்ட வெளிச்சத்தில் தண்டனை வழங்குகிறார் என்றால் அவருக்கு நிகர் அவரே.
நிற்க... உங்கள் மகனுக்கு பணம் புழங்கும் இடங்களான வங்கி, காப்பீடு போன்ற துறைகளில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவரை அந்தத் துறைகளில் கணினி வேலைக்கோ, அதிகாரி பணிக்கோ முயற்சி செய்யச் சொல்லவும். அவருக்கு சனி பகவான் ஆறாம் இடத்தில் சுப பலமாக இருப்பதால் நல்ல இடத்தில் உத்யோகமும், மனைவிக்கு மழலைப் பாக்கியமும் விரைவில் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே பிரிவினை ஏற்பட வாய்ப்பில்லை. தாய் ஸ்தானாதிபதி பூர்வபுண்ய ஸ்தானத்தில் அமர்ந்து தன் ஸ்தானத்தைப் பார்வை செய்வதால், உங்களின் உடல்நலமும் மேற்கூறிய காலகட்டத்திற்குப் பிறகு சீரடையும். அவருக்கும், உங்களுக்கும் தீர்க்காயுள் ஜாதகமே; கவலை வேண்டாம். அரை குறையாக எதையாவது கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். ஒளிமயமான எதிர்காலம் உங்கள் குடும்பத்தை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. உற்சாகத்துடன் இருங்கள்!
குழந்தைகளால் அனுகூலம்
எனது கணவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அறுவைச் சிகிச்சை முடிந்து வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் அவரது உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? நான் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறேன். சொந்த வீடு கட்டும் வாய்ப்பு உண்டா? எனது கணவரின் பூர்வீகச் சொத்து கிடைக்குமா?
இது ஒருபுறமிருக்க, எனது மூத்த மகன் பி.காம் முடித்துவிட்டு சி.ஏ. படித்துக்கொண்டிருக்கிறான். அவன் நல்ல முறையில் படித்து முடிப்பானா? நல்ல உத்யோகம் கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்?
என் இரண்டாவது மகன் ப்ளஸ் 2 படித்துக்கொண்டிருக்கிறான். அவன் பி.இ. படிக்கும் வாய்ப்பு உண்டா? எனது உடல் ஆரோக்கியம் எவ்வாறு அமையும்? மகன்கள் இருவரும் எங்களின் கடைசிக் காலத்தில் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்களா?
வி.கே.பி., மயிலை.
உங்கள் கணவரின் உடல்நலம் சீராகவே இருக்கும். அவருக்குத் தற்சமயம் பூர்வபுண்ய ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. உங்கள் குடும்பச் சொத்தின் பாகப் பிரிவினை உண்டாக சற்று தாமதமாகும். அதேநேரம் உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் வருமானத்தில் வீடு கட்ட வாய்ப்பு உண்டாகும்.
உங்களுக்கு தற்சமயம் உச்சம் பெற்ற பஞ்சமாதிபதி தசையின் பின்பகுதி நடக்கிறது. இது 2014ஆம் ஆண்டு வரை தொடரும். இக்காலகட்டம் சிறப்புகளைக் கொண்டு வந்து சேர்க்கும். மற்றபடி பாக்யாதிபதி திக் பலம் பெற்றுள்ளதால் எதிர்காலம், ஆயுள் பற்றிய கவலை வேண்டாம். உங்களுக்கு புத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றுக் காணப்படுவதால் குழந்தைகளால் இறுதி வரை அனுகூலம் ஏற்படும்.
உங்கள் மூத்த மகனுக்கு கல்வி ஸ்தானாதிபதி சற்று பலம் குறைந்து காணப்படுகிறார். அதனால் அவரை காஸ்ட் அக்கௌண்டிங் படிப்பையும் தொடரச் சொல்லவும். மற்றபடி மேலாண்மைத் துறையில் மார்க்கெட்டிங் பிரிவு ஏற்றது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, நல்ல உத்தியோகம் கிடைக்கும். வருமானமும் நன்றாக இருக்கும். அவருக்காக பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்கையம்மனை வழிபட்டு வரவும். அவருடைய உடல் ஆரோக்கியம் நன்றாகவே அமையும். மேற்கூறிய கால கட்டத்திற்குப் பிறகு திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள்.
உங்கள் இரண்டாம் மகனுக்கு பொறியியல் படிப்பில் கம்யூனிகேஷன், கணினித் துறைகள் ஏற்றவை. இன்ஸ்ட்ரூமென்டேஷன் படிப்பும் படிக்கலாம். மற்றபடி படிப்பை முடித்ததும் வேலை கிடைத்துவிடும்.
இரண்டு மகன்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும். உங்கள் குடும்ப முன்னேற்றத்திற்காக சனிக்கிழமைகளில் சனி பகவானையும், பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.
சித்திரையால் தந்தைக்கு ஆபத்தா?
என் இரண்டாவது மகன் பொறியியல் துறையில் டெலிகம்யூனிகேஷன் இரண்டாம் வருடம் படிக்கிறான். அவன் படிப்பை நல்ல முறையில் முடிப்பானா? நல்ல வேலை கிடைக்குமா? மேலும் எனது மகனுக்கு கடவுள் பக்தி இல்லை. முரட்டுச் சுபாவத்துடன் இருக்கிறான். அவனது போக்கில் எப்போது மாற்றம் ஏற்படும்? சிலர், "அவன் சித்திரை மாதத்தில் பிறந்ததால் தந்தைக்குப் பாதிப்பு ஏற்படும்' என்கிறார்களே... சரியா?
வி. மகேஸ்வரி, பெங்களூர்.
உங்கள் மகனுக்கு அவர் படிக்கும் டெலிகம்யூனிகேஷன் துறை ஏற்றதாகவே அமைந்துள்ளதால், அதில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுவார். படித்து முடித்தவுடன் மேற்படிப்பை, பகுதி நேரமாக மேலாண்மைத் துறையில் மார்க்கெட்டிங், மனித வளம் பிரிவில் படிக்க வைக்கலாம். வேலைக்குச் சென்றுகொண்டே படிக்கலாம். உங்கள் மகனுடைய முரட்டுச் சுபாவம் குறைய, பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். இதனால் கடவுள் பக்தியும் உண்டாகும். மற்றபடி சித்திரை மாதத்தில் பிறந்ததால் தந்தைக்கு ஆகாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சிவபெருமானை வழிபடவும்!
எனக்குத் திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன. இதுவரை மழலைச் செல்வம் இல்லை. அனைத்துப் பரிகாரங்களையும் செய்துவிட்டோம். எப்போது எனக்கு குழந்தை பிறக்கும்?
எஸ். ஹரிகரன், சென்னை-99.
உங்கள் மற்றும் உங்கள் மனைவியின் ஜாதகப்படி, இந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு கருத்தரிக்க வாய்ப்பு உண்டாகும். அதுவரை பிரதி வியாழக் கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும், பிரதி {ஞாயிற்றுக் கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.
சனி பகவானுக்கு தீபம் ஏற்றவும்!
என்னுடைய பிறந்த நட்சத்திரம் ஆயில்யம் என்று உள்ளது. ஆனால் சிலர் மகம் நட்சத்திரம், 1ஆம் பாதம் என்கிறார்கள். இதில் எது சரி?
வெ. சங்கரநாராயணன், திருநெல்வேலி-1.
உங்களுக்கு மகம் நட்சத்திரம், 1ஆம் பாதம் (சிம்ம ராசி) என்பதே சரி. தற்சமயம் பாக்யாதிபதியான குரு பகவானின் தசையில் களத்ர ஆயுள் ஸ்தானாதிபதியான சனி பகவானின் புக்தி 22.6.2010 வரை நடக்கும். இக்காலகட்டத்தில் இன்பங்கள் ஏற்பட சனி பகவானை சனிக்கிழமைகளில் தீபமேற்றி வழிபட்டு வரவும்.
பெரிய வித்தியாசம் இல்லை!
எனது மகனின் ஜாதகம் முதலில் பாம்பு பஞ்சாங்கப்படி எழுதப்பட்டது. பின்னர் கம்ப்யூட்டரில் திருக்கணிதப்படி கணிக்கப்பட்டது. இதில் அம்ச கட்டங்களில் கிரக நிலைகள் மாறி வருவதோடு, தசா இருப்புகளும் வித்தியாசப்படுகின்றன. இந்நிலையில் எந்த ஜாதகம் சரி? இது ஒருபுறமிருக்க, எனது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? எப்படிப்பட்ட சம்பந்தம் ஏற்படும்?
லக்னத்துக்கு 7ல் செவ்வாய், சனி (கடக ராசியில்) உள்ளது. இதனால் ஒரு ஜோதிடர் "செவ்வாய் தோஷம் இருக்கிறது' என்கிறார். மற்றொருவர் "பரிகார செவ்வாய்' என்கிறார். இதில் எது சரி?
கே. ரத்தினம், தாத்தையங்கார்பேட்டை.
உங்கள் மகனுக்கு கம்ப்யூட்டரில் திருக்கணித முறையில் கணிக்கப்பட்ட ஜாதகத்தையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதே சமயம், உங்கள் ஜாதகம் வாக்கிய பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டதற்கும், திருக்கணித முறையில் கணிக்கப்பட்டதற்கும் பெரிய வித்தியாசம் ஏற்படவில்லை. அதனால் கவலைப்பட எதுவும் தேவையில்லை. இதை ஜோசியர்கள் புரிந்துகொண்டு விடுவார்கள். உங்கள் மகனின் ஜாதகப்படி செவ்வாய்பகவான் சனிபகவானுடன் இணைந்திருப்பதாலும், அங்கு அவர் நீச்சபங்கராஜயோகம் பெறுவதாலும் செவ்வாய் தோஷம் இல்லை. அவருக்கு களத்ரஸ்தானாதிபதியை தர்ம கர்மாதிபதிகள் பார்ப்பது சிறப்பு. தென்கிழக்கு அல்லது வடக்கு திசையிலிருந்து சம்பந்தம் ஏற்படும். படித்து, வேலைக்குச் செல்லாத பெண் மனைவியாக அமைவார். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமண முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் மகனின் எதிர்காலம் பிரகாசமாகவே அமையும்.
மறுமணம் நடக்கும்!
எனக்கு 31 வயது ஆகிறது. 2002ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. எனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் 2008ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். இந்நிலையில் எனக்கு மறுமணம் நடக்குமா? குழந்தைப் பாக்கியம் உண்டா? அரசு வேலை கிடைக்குமா? நான் திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் இருக்கிறேன். வெள்ளிக்கிழமைகளில் காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருகிறேன். வேறு ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?
பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகி.
உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி நீச்சபங்கராஜயோகம் பெற்றிருக்கிறார். உங்களுக்கு அரசு உத்யோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, மறுமணம் நடக்கும். படித்த, நல்ல வேலையில் உள்ள வரன் அமைவார். புத்திர ஸ்தானாதிபதி வர்கோத்தாம்சத்தில் அமர்ந்துள்ளதால் குழந்தைப் பாக்கியம் உள்ளது. நீங்கள் செய்து வரும் வழிபாடுகளை தொடரவும். அவை சரியாக உள்ளதால் வேறு பரிகாரங்கள் தேவையில்லை.
வெளிநாட்டு வாழ்க்கை!
எனது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? எப்படிப்பட்ட ஜாதக அமைப்புள்ள வரனைப் பார்க்க வேண்டும்? தற்போது எனது மகன் அமெரிக்காவில் பணிபுரிகிறான். அவன் இந்தியாவிற்கு வந்து பணிபுரியும் வாய்ப்பு உள்ளதா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
ஏ. நாராயணமூர்த்தி, சென்னை.
உங்கள் மகனின் ஜாதகப்படி லக்னத்தில் பஞ்சமாதிபதி அமர்ந்திருப்பது சிறப்பு. அதேசமயம் அவருடன் ராகு பகவான் இணைந்திருப்பதற்கு ஏற்ற தோஷ சாம்யம் பார்த்துச் சேர்க்க வேண்டியது அவசியம். மற்றபடி களத்ரஸ்தானாதிபதி சுபமாக அமர்ந்துள்ளதால், மணவாழ்க்கை நல்ல முறையில் அமையும். வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு திருமணம் கைகூடும். உங்கள் மகன் வெளிநாட்டிலேயே அதிக ஆண்டுகள் வாழ வாய்ப்பு உள்ளது. பரிகாரம் எதுவும் தேவையில்லை.
மனநலம் சீராகும்!
என்னுடைய மகளுக்கு 29 வயதாகிறது. அவளுக்கு ஏற்பட்டுள்ள மனநோய் எப்போது குணமாகும்? திருமணம் எப்போது நடக்கும்?
எம்.டி. நடராஜன், சென்னை.
உங்கள் மகளின் ஜாதகப்படி லக்னத்திற்கும், சுக ஸ்தானத்திற்கும் ஏற்ற சமதோஷம் பார்த்து ஜாதகம் சேர்க்க வேண்டும். இல்லையேல் மணவாழ்க்கையில் குழப்பங்கள் உண்டாகலாம். மற்றபடி அவரின் மனநலம் 2011ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு சீராகும். அதன்பின் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
அன்னிய சம்பந்தம் அமையும்!
எனது மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா? அவனுக்குத் திருமணம் நடப்பதில் கால தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. எப்போது திருமணம் நடைபெறும்? எப்படிப்பட்ட சம்பந்தம் ஏற்படும்? எனது மகனின் உடல் ஆரோக்கியம் எவ்வாறு அமையும்?
பெயர் வெளியிட விரும்பாத தஞ்சாவூர் வாசகர்.
உங்கள் மகனுக்கு அரசு சம்பந்தப்பட்ட உத்தியோகம் கிடைக்கும். அதேநேரம் அவருக்கு களத்ர ஸ்தானாதிபதி அசுப கிரகத்துடன் இணைந்து மறைவு பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது. ஆனாலும் கவலைப்பட வேண்டாம்; இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். அன்னிய சம்பந்தத்தில், உத்தியோகம் செல்லும் பெண் மனைவியாக அமைவார். மற்றபடி உங்கள் மகனின் உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.
இரண்டாம் குழந்தை பிறக்கும்!
எனது மூத்த மகளுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா? குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
பெயர் வெளியிட விரும்பாத இலங்கை,
கொழும்பு வாசகர்.
உங்கள் மகளுக்கு 2011ஆம் ஆண்டு இரண்டாம் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டாகும். அதுவரை பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும். மற்றபடி குடும்ப வாழ்க்கை சீராகவே செல்லும்.
உத்தியோகம் பார்க்கும் மனைவி!
எனது பேரனுக்கு 26 வயது ஆகிறது. ஒரு வங்கியில் நல்ல சம்பளத்தில் பணிபுரிகிறான். அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?
கே.வி. ராமன், சென்னை-53.
உங்கள் பேரனுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். படித்த, உத்யோகம் பார்க்கும் பெண் மனைவியாக அமைவார். மற்றபடி களத்ர ஸ்தானத்திற்கு ஏற்ற சம தோஷம் பார்த்துச் சேர்க்கவும்.
தந்தையின் உத்தியோகம்!
எனது தந்தை தபால் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இறைவனடி சேர்ந்துவிட்டார். எனக்கு அந்த வேலை கிடைக்குமா? என்னுடைய எதிர்காலம் எவ்வாறு அமையும்?
ம. மயிலப்பன், மதுரை.
உங்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, உங்கள் தந்தையின் அரசு உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு உண்டாகும். தொழில் ஸ்தானத்தில் பாக்யாதிபதி அமர்ந்திருப்பதால் நல்ல எதிர்காலம் உள்ளது. பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
தனியார் துறையில் வேலை
எனது மகனுக்கு 30 வயது ஆகிறது. எம்.எஸ்.ஸி., எம்.ஃபில். முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தான். இப்போது அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டான். தொடர்ந்து பி.எட். படித்துவிட்டு வீட்டில் இருக்கிறான். அவனுக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டா? மேலும் திருமணம் எப்போது நடைபெறும்?
பெயர் வெளியிட விரும்பாத வேலூர் மாவட்ட வாசகி.
உங்கள் மகனின் ஜாதகப்படி களத்ர ஸ்தானாதிபதி பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடன் இணைந்திருப்பதும், பார்வை செய்வதும் குறை. இதற்கேற்ற சம தோஷம் பார்த்து ஜாதகம் சேர்க்க வேண்டியது அவசியம். உங்கள் மகனை உடனடியாக கணினித்துறையில் உத்தியோகத்திற்கு முயற்சி செய்யச் சொல்லுங்கள்; தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு திருமணம் நடக்கும். களத்ர ஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை படிவதால் உங்கள் மகனின் தகுதிக்கேற்ற இடத்திலிருந்து பெண் அமையும்.
திருமணம் நடக்கும்!
நான் எனது திருமணத்திற்காகக் கடந்த ஆறு வருடங்களாக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். ஆனால் ஏதும் பலனில்லை. திருமணஞ்சேரி, கொடுமுடி, ஆலங்குடி, புதன் ஸ்தலம், சூரியனார் கோயில் ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்துள்ளேன். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? எனக்குத் திருமணம் ஆகாது என்றால் எனது தம்பியின் திருமண முயற்சிகளைத் தொடங்கலாமா? இது ஒருபுறமிருக்க, நான் எந்தத் தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படும்?
ரவி, திருப்பூர்.
உங்களுக்கு இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் திருமண முயற்சிகள் வெற்றி பெறும். கணினி, சிமெண்ட், ஸ்டேஷனரி போன்ற துறைகளில் ஈடுபடலாம். ஜாதகப்படி களத்ரஸ்தானாதிபதி சுப பலம் பெற்றுள்ளதால் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். உங்கள் திருமணத்திற்குப் பிறகு உங்கள் தம்பிக்கு திருமணம் செய்யலாம்.
ஏப்ரலுக்குப் பின்...
எனது மகனுக்கு 32 வயது ஆகிறது. எப்போது திருமணம் நடைபெறும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
கே. சுந்தரேசன், சென்னை-11.
உங்கள் மகனுக்கு இந்த ஆண்டில், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு திருமணம் கைகூடும். களத்ர ஸ்தானத்திற்கு ஏற்ற சமதோஷம் பார்த்துச் சேர்க்க வேண்டும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
மனதுக்குப் பிடித்த வரன்!
எனது மகள் தற்போது லண்டனில் பணிபுரிகிறார். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும்? அவரது மனதிற்குப் பிடித்த வரன் அமையுமா?
பாலு, நங்கநல்லூர், சென்னை.
உங்கள் மகளின் ஜாதகப்படி களத்ர ஸ்தானாதிபதி பூர்வபுண்ய பஞ்சம ஸ்தானாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பதால் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். மேலும் தற்சமயம் குடும்ப ஸ்தானாதிபதியின் தசையில் பாக்யாதிபதியின் புக்தி நடக்கிறது. இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் முயற்சிகள் வெற்றி பெறும். அவரின் மனதுக்குப் பிடித்தபடியே வரன் அமையும். எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும்.
ரகசியங்கள் பொதிந்த திருமந்திரம்!
நான் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். தற்போது ஒரு தனியார் கல்லூரியில் நூலகராகப் பணிபுரிகிறேன். ஆரம்பத்தில் அங்கே நிர்வாகியாகப் பணிபுரிந்த நான், இப்போது நூலகராகப் பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளேன். மிகக் குறைந்த சம்பளமே வாங்குகிறேன். இது வரை சேமிப்பு என்பதே இல்லை. இந்நிலையில் நல்ல வருமானத்துடன் நிலையான உத்தியோகம் கிடைக்குமா? சொந்தத் தொழில் அமையுமா? இது ஒருபுறமிருக்க, எனது மனைவிக்கு கரு சிதைந்து விட்டது. அவள் மீண்டும் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டா? எனக்கு வீடு மற்றும் வாகன வசதி கிடைக்குமா? ஆன்மீகப் பயணம் செல்வேனா?
ஆர். சுரேஷ்குமார், சரவணம்பட்டி.
உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி, பூர்வபுண்ய ஸ்தானாதிபதி மற்றும் குடும்பாதிபதி ஆகியோர் ஆட்சி பெற்றுள்ளார்கள். மேலும் தொழில் ஸ்தானாதிபதி லக்னத்திலும், பாக்யாதிபதி தொழில் ஸ்தானத்திலும் அமர்ந்திருப்பதும் உத்யோகத்திற்கும், தொழிலுக்கும் சிறப்பான அமைப்பாகும். மேலும் களத்ரஸ்தானாதிபதி குருபகவானின் பார்வையைப் பெறுகிறார். இதனால் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து சுயசாரத்தில், தொழில் ஸ்தானத்தில் பலமாக அமர்ந்துள்ள பாக்யாதிபதியின் தசை நடக்கத் தொடங்கும். இதிலிருந்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்; பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த ஆண்டு இறுதிக்குள் உங்கள் மனைவி மறுபடி கருத்தரித்து நல்ல முறையில் பிள்ளையைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் மனைவிக்கு லக்னாதிபதி பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும், பாக்யாதிபதி களத்ர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும், பூர்வபுண்ய ஸ்தானாதிபதி குருபகவானுடன் இணைந்திருப்பதும், தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதும் சிறப்பாகும். இதனால் அவரின் ஜாதகமும் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். கஜகேசரி யோகம் இருப்பதாலும், லக்னாதிபதி ஆத்மகாரகனாகி லக்னத்திலேயே ஆட்சி பெற்றிருப்பதாலும், "பிரபஞ்சத்தின் ஆசான்' என்றழைக்கப்படுகிற சனி பகவானை குருபகவான் பார்வை செய்வதாலும், உங்களுக்கு குருவருளும், திருவருளும் ஒன்றாகக் கிடைக்கப்பெறும். நீங்கள் விரும்பும் வீடு, வாகனம் மற்றும் ஆன்மீகப் பயணம் அனைத்தும் சித்திக்கும். ராகு தசையில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். குறிப்பாக ஆன்மீக தர்ம காரியங்களில் உங்களை இறைவன் பயன்படுத்திக் கொள்வார். அரிதான வேத-வேதாந்த ரகசியங்கள் பொதிந்து கிடக்கும் திருமூல நாயனாரின் திருமந்திரத்தை நல்ல முறையில் படித்து மக்களுக்கு விளங்க வைக்கும் முயற்சியில் ஈடுபடலாம்.