Friday, March 19, 2010 5:57 AM IST
ஜோதிடம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்


எனது திருமணம் பெற்றோர் சம்மதம் இல்லாமல் என் விருப்பப்படியே நடைபெற்றது. தற்போது எனக்கும் பெற்றோருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில், நான் கர்ப்பிணியாக பெற்றோரிடம் உள்ளேன். ஆனால் எனது தந்தையும், தம்பியும் என்னுடன் பேசுவது கிடையாது. இந்நிலையில் எனது எதிர்காலம் எவ்வாறு அமையும்? தந்தை மற்றும் சகோதரனுடன் எனக்கு நல்லுறவு ஏற்படுமா? நான் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டா? எனது கணவர் தொடர்ந்து என்னிடம் அன்போடு நடந்துகொள்வாரா? எனது வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா?
ஆனந்தவல்லி, சென்னை-35.


"அனுபவம் என்பது ஒரு அருமையான சீப்பு. பெரும்பாலும் வழுக்கையான பிறகே அது கிடைக்கிறது' - இது ஓர் ஆங்கிலப் பழமொழி. இந்த அனுபவம் பெற்ற சீப்பை அளவு கோலாக வைத்து, வருகின்ற வரன்களை எடைபோட வல்லவர்களே பெற்றோர்கள்.

குமரிகளுடைய இதயம் ஆண்களின் தேகப் பொலிவையும், சில சந்தர்ப்பங்களில் காதலின் போது அவர்கள் காட்டும் மிகையான அன்பையும் மட்டுமே உண்மை என நம்பும். நமது பரந்த அனுபவத்தில் இப்படி நம்பிக் கெட்ட பெண்கள் ஏராளம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாறாகப் பெற்றோர்களோ, வரனின் அழகோடு நின்றுவிடாமல், அகம் புறம் என அனைத்தையும் அலசிப் பார்த்து தகுந்த மணவாளனை தங்கள் பெண்ணுக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதில் நேர்மையான ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

எந்த ஒரு தாயோ அல்லது தந்தையோ தங்கள் மகளை, தெரிந்தே பாழும் கிணற்றில் தள்ளுவதில்லை. இதையும் மீறி பெற்றோர் பார்த்து வைத்த சில திருமணங்கள் தோல்வி அடைவதையும், சில காதல் திருமணங்கள் வெற்றி அடைவதையும் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஆனால் இந்த சதவிகிதம் மிகவும் குறைவானதே என்பது அனைவரும் அறிந்ததே. இங்கேதான் ஜோதிடத்தின் பங்களிப்பு நல்வாழ்வைத் தீர்மானிக்க உதவுகிறது.
   சராசரி மனிதர்களுக்கு மற்றவர்களிடம் பழகிப் பார்த்தால்தான் அவர்களுடைய குண நலன்களும், பொருளாதார வசதியும் அதுவும் ஓரளவுக்கு மட்டுமே தெரிய வரும். ஜோதிடமோ பொய் என்னும் இரும்புத் திரையை அறிவென்னும் வாளால் கிழித்தெறிகின்ற சக்தி ஞானப் பேராயுதம். "எந்த ஜாதகருக்கு எந்த ஜாதகியுடன் மணவாழ்வு ஒத்துப் போகும்' என்று திறமையுள்ள ஜோதிடர்கள் கணிக்கும் போது நிச்சயம் எழுபத்தைந்து சதவிகிதம் வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம். மீதி உள்ளவை இறைவனின் திருவருளால் நடப்பவை. அவற்றை மானுட சக்தி கொண்டு தடுத்துவிட முடியாது. இதற்கும் நமது புராணங்கள் தக்க பரிகாரங்களைச் சொல்லியிருக்கின்றன. "ஜாதகப் பொருத்தம் பார்த்த பிறகும் மணவாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டால், பார்வதி தேவியை (அம்பாளை) பிரதி வெள்ளிக்கிழமைகளில் வணங்குவதன் மூலம் மணவாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கலக்கங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்' என்று ஸ்ரீவேத வியாசரின் புதல்வரான ஸ்ரீசுகப்பிரம்ம மஹரிஷி கூறுகின்றார். எனவே பொதுவாக இளம் பெண்களும், ஆண்களும் தந்தை, தாயின் அனுபவத்தையும், ஜோதிடரின் அறிவையும் நம்பி திருமண வாழ்க்கையைத் தொடங்கினால் தோல்விக்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

நிற்க... நீங்கள் ஏற்கெனவே காதல் திருமணம் செய்து கொண்டு கருவுற்ற நிலையில் மதில் மேல் பூனையாக மனம் தத்தளிக்கிறீர்கள். உங்கள் கணவர் எதிர்காலத்தில் இதே அக்கறையுடன் இருப்பாரா என்று நீங்கள் கேட்பதை வைத்துக் கொண்டே உங்கள் மனதில் ஐயப்பாடுகள் துளிர்விட்டிருப்பதை உணர்ந்து கொள்கிறோம். உங்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு வாழ்க்கையில் பொருளாதார அபிவிருத்தியும், மனமகிழ்ச்சியும் உண்டாகும்.

அது வரை குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். அதற்குப் பிறகு உங்கள் பிறந்த வீட்டுடன் சுமுகமான உறவு உண்டாகும். வெளிநாடு செல்லும் யோகமும் உள்ளது. எதிர்காலம் சிறப்பாக அமையும்! இறைவனை (உங்கள் இஷ்ட தெய்வத்தை)  மறவாதிருங்கள்!

சுக்​கிர தசை​யில் முன்​னேற்​றம்​

நான் ஓய்வு பெற்ற தபால் துறை ஊழி​யர்.​ என்​னு​டைய ஆயுள் பலம் எப்​படி இருக்​கி​றது?​ என்​னு​டைய எதிர்​கா​லம் எவ்​வாறு அமை​யும்?​
ஜி.​ ரெங்​க​ரா​ஜன்,​​ தஞ்​சா​வூர்.​


உங்​க​ளுக்கு சென்ற ஆண்டி​லி​ருந்து லக்​னா​தி​பதியான சுக்​கிர தசை நடக்​கத் தொடங்​கி​யுள்​ளது.​ இந்த தசை​யில் படிப்​ப​டி​யான முன்​னேற்​றம் உண்​டா​கும்.​

மேலும் ஆயுள்​கா​ர​க​ரா​கிய சனி பக​வான் பாக்​யா​தி​ப​தி​யாகி,​​ லாப ஸ்தா​னத்​தில் அமர்ந்​தி​ருப்​ப​தால் தீர்க்​கா​யுள் ஜாத​கமே.​

தில ஹோமம்!  
எனது குடும்பத்தில் முன்னோர்கள் சாபம் உள்ளது என்றும், அவர்களை திருப்திப்படுத்தி ஆசி வாங்க திதி கொடுக்க வேண்டும் என்றும் சில ஜோதிடர்கள் சொல்கிறார்கள். அதன்படி எப்போது, எங்கே திதி கொடுக்க வேண்டும்? இது ஒருபுறமிருக்க, எனக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு ஒன்று உள்ளது. அது எப்போது விற்பனையாகும்? எனது கடன் தொல்லை எப்போது தீரும்?
சி. முத்துசாமி, ஈரோடு-4.


பித்ரு தோஷம் உண்டாகாமல் இருக்க மூதாதையார்கள் இறந்த திதியில் வருடா வருடம் தவறாமல் திதி கொடுக்க வேண்டும். மேலும் அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகணம் போன்ற முக்கிய தினங்களிலும் தர்ப்பணம் செய்து எள்நீர் கொடுக்க வேண்டும். இத்தகைய விஷயங்களைத் தவற விட்டவர்கள் ராமேஸ்வரம் சென்றோ,  பவானி கூடுதுறைக்குச் சென்றோ ஒரு தடவை "தில ஹோமம்' செய்துவிட்டு வர, பழைய குறைகள் நீங்கிவிடும்.

வைதிகர்களிடம் கேட்டால் இந்த ஹோமம் பற்றி விளக்குவார்கள். தில ஹோமம் செய்ய, உத்திராயண புண்ணிய காலம் உகந்தது.

மேலும் பித்ரு தோஷம் தீர பிரதி தினமும், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை "நம சிவாய' என்று ஜபித்துக் கொண்டே சுற்றி வழிபட்டு வர வேண்டும்.   மற்றபடி உங்கள் வீடு இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல விலைக்கு விற்று விடும். கவலை வேண்டாம்; தற்சமயம் நடப்பது சுகாதிபதியின் தசையாக உள்ளதால் கடன் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வந்துவிடுவீர்கள்.

எல்லாம் சரியாகும்!
 எனது மகளுக்கும், மருமகனுக்கும் அடிக்கடி மனக் கசப்பு ஏற்படுகிறது. எப்போது இருவருக்கும் இடையே சுமுக உறவு ஏற்படும்?
பெயர் வெளியிட விரும்பாத கோவை வாசகர்.

   
உங்கள் மகள், மருமகன் ஜாதகப்படி இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரையில் இத்தகைய மனக்குழப்பங்கள் இருக்கும்.

அது வரை பிரதி செவ்வாய்க் கிழமைகளில் துர்கையையும், பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானையும் வழிபட்டு வாருங்கள்; எல்லாம் சரியாகிவிடும்.
 
வலுவான ஜாதகம்!
எனக்கு கடந்த மூன்று வருடங்களாக வரன் பார்த்து வருகிறார்கள். இதுவரை ஏதும் சரியாக அமையவில்லை. மேலும் நான் சற்று நிறம் குறைவாக இருக்கிறேன். அதுவே என் வாழ்க்கைக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது. இதைக் காரணம் காட்டி, என்னுடன் இருப்பவர்களே என்னை மட்டமாகப் பேசுகிறார்கள். "கருப்பாக இருப்பவர்களுக்கு எந்த ஆசையும், எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது' என்பது போல் அவர்களின் பேச்சு உள்ளது. இதனால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். தினம் தினம் மனதிற்குள் அழுது கொண்டிருக்கிறேன். இந்நிலையில் எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நல்ல வாழ்க்கை அமையுமா?
என். சங்கரி, திருநெல்வேலி.

 
உங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் திருமண முயற்சிகள் வெற்றி பெறும். படித்த, நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமையும். வெளிநாடு செல்லும் யோகமும் உள்ளது.

உங்களுக்கு வலுவான ஜாதகமே! லக்னத்தில் பூர்வபுண்ய ஸ்தானாதிபதி அமர்ந்திருப்பதும், லக்னாதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதும், பாக்யாதிபதி களத்ர ஸ்தானாதிபதியைப் பார்ப்பதும் சிறப்பு. எனவே திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே அமையும்.

நிலையான உத்யோகம்!
எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? வரன் அந்நியத்தில் அமையுமா,  சொந்தத்தில் அமையுமா? நிலையான தொழில் அல்லது உத்யோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
எம். ஜெயகீர்த்தி, சத்தியமங்கலம்.


உங்களுக்கு இந்த ஆண்டுக்குள் அரசுத் துறையில் நிலையான உத்யோகம் அமையும்.  2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் திருமணம் கை கூடும். அன்னிய சம்பந்தம் அமையும். மற்றபடி சுக ஸ்தானத்திற்கும், களத்ர ஸ்தானத்திற்கும் ஏற்ற சம தோஷம் பார்க்கவும்.

கிழக்கு திசையில் வரன்
எனது மகளின் திருமணத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக வரன் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை. அவருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? எந்தத் திசையிலிருந்து, எப்படிப்பட்ட வரன் அமையும்?
ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி.


உங்கள் மகளுக்கு இந்த ஆண்டுக்குள் திருமண முயற்சிகள் வெற்றிபெறும். தென் கிழக்கு திசையிலிருந்து வரன் அமையும். அவருக்கு சர்ப்ப தோஷமுள்ள வரனாகவும்,  பூர்வபுண்ய ஸ்தானத்திற்கு ஏற்ற வரனாகவும் பார்க்க வேண்டும்.

லக்னாதிபதி, பஞ்சமாதிபதி மற்றும் பாக்யாதிபதிகள் வலுவாக உள்ளதால் சம தோஷமுள்ள வரன் கிடைக்கும். பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை.

அதிர்ஷ்ட வாய்ப்புகள்
எனது மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? அவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
வி. நாராயணன், சென்னை-73.


உங்கள் மகனுக்கு களத்ர ஸ்தானாதிபதி தன் விரோதம் பெற்ற கிரகத்துடன் இணைந்திருப்பதற்கு ஏற்ப சம தோஷம் பார்த்துச் சேர்க்க வேண்டும். அவர்களுடன் குரு பகவான் இணைந்திருப்பது திருமணத்தில் தாமதத்தை ஏற்படுத்தினாலும், நல்ல இடத்திலிருந்து பெண் அமையும்.

இந்த ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். பாக்யாதிபதி பலம் பெற்று அமர்ந்திருப்பதால், உங்கள் மகனின் எதிர்காலம் வளமாக இருக்கும்.

மேலும் தொடர்வது அஷ்டலட்சுமி யோகம் பெற்ற ராகு பகவானின் தசையாக உள்ளதால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவார்.

நல்ல வாரிசு!
எனக்கு மழலை பாக்கியம் கிடைக்கவில்லை. என் சொத்துக்களைப் பாதுகாக்கவும், வியாபாரத்தை நடத்தவும் தத்தெடுக்க வாய்ப்பு இருக்கிறதா?
ராஜகோபால், கோவில்பட்டி.


நீங்கள் உங்கள் மனைவியின் ஜாதகத்தை அனுப்பி வைக்கவில்லை. உங்கள் ஜாதகப்படி பார்த்தால், நீங்கள் தத்து எடுக்க வாய்ப்பு உள்ளது. நல்லவர் உங்களின் வாரிசாக அமைவார்.

பிரதி வியாழக்கிழமைகளில் குரு, தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.
    
சிறப்பான யோகங்கள்!
எனது மகள் என்ஜினியரிங் முடிக்கப் போகிறாள். அவளுக்கு நல்ல உத்யோகம் கிடைக்குமா? மேற்கொண்டு ஐ.ஏ.எஸ். படிக்க வாய்ப்பு இருக்கிறதா?
என். உமா, சென்னை.


உங்கள் மகளுக்கு மீன லக்னமா அல்லது மேஷ லக்னமா என்று சந்தேகம் உள்ளதால் அவரின் பிறந்த ஊரையும் குறிப்பிட்டு, மறுபடியும் சரியான ஜாதகத்தை வெளியில் கணித்து எங்களுக்கு அனுப்பி வைக்கவும். மற்றபடி அவருக்கு கஜகேசரி யோகம், குரு மங்கள யோகம் போன்ற யோகங்கள் உள்ளது சிறப்பு.

தற்சமயம் ராகு தசை நடக்கிறது. தொடர்வது குரு தசையாகும். மீன லக்னமாக இருந்தாலும் கேந்திராதிபத்ய தோஷம் மறைகிறது. உங்கள் மகளின் எதிர்காலம் சிறப்பாகவே அமையும்.

உடன் பிறந்தோருக்கு நலம்
எனது மகன் டிராவல்ஸ் நடத்துகிறார். கார், ஆம்னி வேனை வாடகைக்கு விட்டு, தொழில் செய்கிறார். ஆனால் தொழிலில் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதே தொழிலைத் தொடர்ந்து செய்யலாமா? அல்லது வேறு தொழிலில் ஈடுபடலாமா? மேலும் அவனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? அவன் ஜாதகப்படி உடன் பிறந்தோரின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?
ம. மணி, முசிறி.


உங்கள் மகனுக்கு டிராவல்ஸ் தொழில் ஏற்றதே. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை தொழிலில் இத்தகைய குழப்பங்கள் தொடரும். அதற்குப் பிறகு வருமானம் சீராக இருக்கும். அந்தக் காலத்தில் திருமணம் செய்யலாம்.

பூர்வபுண்ய ஸ்தானாதிபதி உச்சம் பெற்று பாக்யாதிபதியைப் பார்ப்பதாலும், களத்ரஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்வதாலும் எதிர்காலம் சிறப்பாக அமையும். உடன் பிறந்தோருக்கும் நலம் உண்டாகும்.

பணக் கஷ்டம் தீர, பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

குறைபாடுகள் தீரும்!
என் இரண்டாவது மகன் பி.இ. முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் ஒரு வருடம் படித்தான். இன்னொரு வருடம் அங்கே படிக்கலாம் என்று இருந்தவன், பயமாக இருக்கிறது என்று சொல்லி இந்தியாவுக்கு வந்துவிட்டான். அவனை டாக்டரிடம் காண்பித்ததில் அவனுக்கு நடக்காததை நடந்த மாதிரி நினைக்கும் எண்ணம் இருக்கிறது என்று சொன்னார். இந்நிலையில் எனது மகன் எப்போது இயல்பு நிலைக்கு வருவான்? அவனை மறுபடியும் வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பலாமா? அல்லது இங்கேயே சொந்தத் தொழில் செய்யலாமா? அவனைப் படிக்க வைத்ததால் ஏற்பட்ட கடனை சொத்தை விற்று அடைக்கலாமா?
தாமோதரன், கோவை-1.


உங்கள் மகனுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை சென்னை அல்லது பெங்களூரில் கிடைத்துவிடும். அவனை மறுபடியும் வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்ப வேண்டாம்.

பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானையும், பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வர, அவரின் குறைபாடுகள் தீர்ந்துவிடும். உங்கள் மகன் வேலைக்குச் சென்று கடனை அடைத்துவிட வாய்ப்பு உள்ளது.

ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு!
எனக்கு 29 வயது ஆகிறது. திருமணமாகி ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். தற்போது மீண்டும் கருவுற்றேன். இந்நிலையில் நான் முதுகு, இடுப்பு, கை}கால் வலியால் அவதிப்படுகிறேன். இது தவிர கையில் வெண்புள்ளிகள் காணப்படுகின்றது. நிறைய மாத்திரைகள் சாப்பிடுகிறேன். இதனால் வயிற்றில் இருக்கும் கருவிற்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? இந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாமா?  "குழந்தை வேண்டாம்' என்றும், "வேண்டும்' என்றும் இரு மனதாகத் தவிக்கிறேன். கணவர், மகள், உறவினர்கள் என்று அனைவரிடமும் எரிச்சலடைகிறேன். எனது கணவரோ, "குழந்தை பெற்றுக் கொள்வதும், வேண்டாம் என்பதும் உனது விருப்பம்' என்று கூறுகிறார். எனக்கோ சில சமயங்களில் தற்கொலை எண்ணம் உருவாகிறது. இந்நிலையில் என் எதிர்காலம் எவ்வாறு அமையும்? குழந்தை நல்ல முறையில் பிறக்குமா? ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டா? எனக்கு ஏற்பட்டுள்ள உபாதை எப்போது தீரும்?
ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி.


உங்கள் இரண்டாம் குழந்தை நல்லபடியாக பிறக்கும். ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. இத்தகைய கேள்விகள் கேட்கும் போது உங்கள் மற்றும் கணவர், குழந்தையின் ஜாதகங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்; விரைவில் உடல்நலம் சீராகும்.

மேலதிகாரிகளை அனுசரிக்கவும்!
எனக்கு 29 வயது ஆகிறது. நான் எம்.ஏ., எம்.பி.ஏ. முடித்துள்ளேன்.  தற்போது நான் வேலை செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தில் எனக்கும், உயர் அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இந்நிலையில் எனக்கு வேறு நல்ல வேலை கிடைக்குமா? மேலும் திருமணம் எப்போது நடக்கும்? எப்படிப்பட்ட மனைவி அமைவார்? நான் சொந்த வீடு கட்டும் யோகம் உண்டா?
வெங்கட்ராமன், சென்னை-44.


நீங்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் தற்சமயம் பார்த்து வரும் வேலையிலேயே இருக்கவும். தசா புக்திகள் சாதகமாக இல்லாததால், மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்று உங்கள் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் சார்ந்துள்ள மனித வளம் துறை உங்களுக்கு ஏற்றதே ஆகும். வங்கி, காப்பீடு போன்ற துறைகளிலும் வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல வருமானம் தரும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

உங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். களத்ர ஸ்தானத்திற்கு ஏற்ற சமதோஷம் பார்த்துச் சேர்க்க வேண்டும். கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையிலிருந்து, படித்த பெண் அமைவார். 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு, சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

நந்தீஸ்வரரை வழிபடவும்!
எனது மகனுக்கு 37 வயது ஆகிறது. திருமணம் நடப்பதில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? மேலும் நல்ல வருமானத்துடன் வேலை கிடைக்குமா?
பி. கலியபெருமாள், மூவலூர்.


உங்கள் மகனின் ஜாதகப்படி சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கிரகங்களுக்கும், குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கிரகங்களுக்கும் ஏற்ற சமதோஷம் பார்க்க வேண்டும். மற்றபடி "திருமணம் நடக்காது' என்று கூற முடியாது. களத்ரஸ்தானாதிபதி பூர்வபுண்ய ஸ்தானாதிபதியின் சாரம் பெற்று நீச்சபங்கராஜயோகம் பெற்ற பூர்வ புண்யாதிபதியுடன் இணைந்திருப்பதாலும், குரு பகவான் களத்ர ஸ்தானத்தையும், பூர்வபுண்ய ஸ்தானத்தையும் பார்வை செய்வதாலும் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும்.

மேலும் தற்சமயம் பூர்வபுண்ய ஸ்தானாதிபதியின் தசையில் பாக்யாதிபதியின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமண முயற்சிகள் வெற்றி பெறும். கணினி, ஹார்டுவேர், இரும்பு, வெள்ளி, பெயிண்ட், ஸ்டேஷனரி போன்ற துறைகளில் தொழில் செய்யலாம். தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பது சிறப்பு.

பிரதி பிரதோஷ காலங்களில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வழிபட்டு வரவும். தொழிலில் படிப்படியாக நல்ல வருமானம் கிடைத்துவிடும்.

பொருளாதாரம் ஸ்திரப்படும்!
நான் கடந்த 19 வருடங்களாக தையல் தொழில் செய்து வருகிறேன். அதில் சொல்லிக்கொள்ளும்படி முன்னேற்றம் இல்லை. எப்போது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்? சொந்த வீடு கட்டும் யோகம் உண்டா? இரண்டு மகள்களையும் நல்ல முறையில் படிக்க வைப்பேனா?
ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.


உங்களுக்கு 21.10.09 முதல் பூர்வபுண்ய ஸ்தானாதிபதியின் தசையில் அனுகூலமான புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இந்த புக்தியில் உங்களுக்கு நலன்கள் கூடத் தொடங்கும். செய்தொழிலிலும் நல்ல வருமானம் கிடைக்கும். வீடு கட்டும் யோகமும் உண்டாகும்.

பூர்வபுண்ய ஸ்தானாதிபதி சுய சாரத்தில் அமர்ந்து பலம் பெற்றிருப்பதால், குழந்தைகள் நல்ல முறையில் முன்னேறிவிடுவார்கள். குடும்பப் பொருளாதாரம் மேற்கூறிய காலகட்டத்திலிருந்து படிப்படியாக உயரும்.

2012-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு, பொருளாதார நிலை ஸ்திரப்பட்டுவிடும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.

பித்ரு தோஷமில்லை!
நான் 2007ல் வேலை இழந்தேன். இன்று வரை வேறு வேலை கிடைக்கவில்லை. எப்போது எனக்கு வேலை கிடைக்கும்? சொந்தத் தொழில் செய்யலாமா? பித்ரு தோஷம் உள்ளதா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
எஸ். தண்டபாணி, திருவண்ணாமலை.


   உங்களுக்கு தொழில் ஸ்தானம் பாதிக்கப்படவில்லை. தொழில் ஸ்தானாதிபதி பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ய ஸ்தானத்தைப் பார்வை செய்வதாலும், பூர்வபுண்ய ஸ்தானாதிபதியுடனும், பாக்யாதிபதியுடனும் சம சப்தமாக அமர்ந்துள்ளதாலும்- கஜ கேசரி யோகம், குரு மங்கள யோகம், சந்திரமங்கள யோகம் ஆகிய யோகங்கள் உண்டாகின்றன.

உங்களுக்கு பலத்த தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதும் சிறப்பாகும். தொழில் ஸ்தானத்தில் சுகாதிபதியும், லாபாதிபதியும் அமர்ந்திருப்பதும் விசேஷம். பித்ரு தோஷமில்லை.

உங்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, மறுபடியும் உத்யோகம் கிடைத்துவிடும். சொந்தத் தொழில் வேண்டாம். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை தீபமேற்றி வழிபடவும்.

அனுகூலமான காலம்
எனது மகனுக்கு 26 வயதாகிறது. எந்த வேலையில் சேர்ந்தாலும் நிரந்தரமாக  இருப்பதில்லை. எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்? அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? காளஹஸ்திக்கும் சென்று வந்தோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
பெயர் வெளியிட விரும்பாத ஆவடி வாசகி.


உங்கள் மகனுக்கு சென்ற மே மாதத்திலிருந்து அனுகூலமான காலம் தொடங்கியுள்ளதால், அவர் தன் வேலையில் ஒரு பிடிப்புடன் இருக்கத் தொடங்குவார்.

அவருக்கு 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். சொந்தத்தில் சம்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. படித்த பெண் மனைவியாக அமைவார்.

சர்ப்ப தோஷம் உள்ளதால், காளஹஸ்தி சென்று செய்துள்ள பரிகாரம் சரியானதே.

















Comments

Post your comments *
Email *
Name *
Verification Code *
Enter numbers shown in image *

Note: Comments may be moderated by our editors.