Friday, September 03, 2010 2:15 PM IST
ஜோதிடம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்
ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர், சென்னை.


நான் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவன். ஆனாலும் ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவன். என்னுடைய மகனுக்கு 28 வயது ஆகிறது. அவனது திருமணத்திற்காகக் கடந்த ஒரு வருடமாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை. எப்போது அவனுக்குத் திருமணம் நடக்கும்? மேலும் இரட்டைப் படை வயதில் திருமணம் செய்யக்கூடாது என்பது சரியா?

ல்போன்ஸ்ராஜ், விருதுநகர்.


நீங்கள் கிறிஸ்துவர் என்றும், ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். இயேசுநாதரின் திருவருளை நாங்களும் உளமாற நம்புகிறோம். பைபிளின் புதிய ஏற்பாட்டிலும், பழைய ஏற்பாட்டிலுமாகச் சேர்த்து சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் திருமணம், தம்பதி போன்ற சொற் பிரயோகங்கள் உள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

"ஏன் திருமணம் அவசியம்?' என்ற ஆங்கில நூலை எழுதிய பிரபல எழுத்தாளர் ஸ்டாண்டன், "கிறிஸ்துவத்துடன் பெயருக்குத் தொடர்பு என்றில்லாமல், இம்மதத்தில் உறுதியான விசுவாசமும் உடையவர்களாக இருப்பின், அவர்களுடைய திருமண வாழ்வில் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது' என்று கூறியுள்ளார். இது தவிர, சேவை மனப்பான்மையினால், மண வாழ்வை நாடாது, "தேவ ஊழியம்' புரிய விரும்புவோரையும் கிறிஸ்துவம் வரவேற்கிறது. கர்த்தரின் கிருபையால் உங்கள் மகனுக்குத் தகுந்த மணப்பெண் அமைய, நாங்களும் தேவகுமாரனை வேண்டுகிறோம். உங்கள் மகன் இல்லறத்தில் இருந்தபடியே இறைபக்தி செய்யலாம்.

ஜாதகப்படி உங்கள் மகனுக்குக் களத்ர ஸ்தானாதிபதி சுபத்தன்மை பெற்று லக்ன சுபர்களுடன் இணைந்திருப்பதால் தகுதியான இடத்தில் இந்த ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். இரட்டைப் படை வயதில் திருமணம் செய்யக் கூடாது என்று நம் வழக்கத்தில் உள்ளதால் முடிந்தவரை அதைத் தவிர்ப்பது நல்லது. அதேசமயம் நல்ல இடத்தில் சம்பந்தம் ஏற்படும்போது ஒற்றைப் படை வயதில் (இருவரில் ஒருவருக்காவது ஒற்றைப் படை வயது இருக்கும் பட்சத்தில்) நிச்சயதார்த்தமாவது செய்து கொண்டால் தவறில்லை. மற்றபடி உங்கள் மகனுக்கு 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

பணம் திரும்பக் கிடைக்கும்!

நான் தனியார் துறையில் பணிபுரிகிறேன். என்னிடம் வேறு நல்ல உத்யோகம் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக் கணக்கில் ஒருவர் ஏமாற்றிவிட்டார். இதனால் கடன் தொல்லைக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு அந்தத் தொகை மீண்டும் கிடைக்குமா? உத்யோக மாற்றம் ஏற்படுமா?

வெ.ஸ்ரீனிவாசன், சென்னை-75.


உங்களுக்கு நீங்கள் கொடுத்த பணம் இந்த ஆண்டுக்குள் திரும்பக் கிடைக்கும். அடுத்த ஆண்டு ஜனவரிக்குப் பிறகு உத்யோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். பிரதி வியாழக் கிழமைகளில் குரு, தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

மேற்கு வாசல் வீடு!

என்னுடைய நண்பருக்கு எப்போது திருமணம் நடக்கும்? மேலும் அவருடைய ஜாதகப்படி எந்த திசை பார்த்த வீடு ஏற்றது?

ராதாகிருஷ்ணன், திருச்சி.


உங்கள் நண்பரின் ஜாதகப்படி களத்ர ஸ்தானமும், ஸ்தானாதிபதியும் பாதிக்கப்பட்டுள்ளதால் திருமணம் கைகூடுவது சிரமமே. மற்றபடி அவருக்கு மேற்கு திசை பார்த்த வாசல் உள்ள வீடு நலம் பயக்கும்.

ஆயுளுக்குக் குறைவில்லை!

என்னுடைய மூன்றாவது மகன் ஆசிரியராகப் பணிபுரிகிறான். அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? எப்படிப்பட்ட பெண் மனைவியாக அமைவார்? புத்திர பாக்யமும், அவனுடைய ஆயுள் பலமும் எவ்வாறு இருக்கும்? திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருவிடந்தை ஆகிய ஸ்தலங்களில் பரிகாரம் செய்துள்ளேன். மேலும் எனது மகன் 23 ஆண்டுகளாக பௌர்ணமி விரதம் இருக்கிறான். வேறு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா?

பாலகிருஷ்ணன், வாலாஜாபாத்.


உங்கள் மகனுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பாக்யாதிபதியின் தசையில் லக்னாதிபதியின் புக்தி நடக்கத் தொடங்கி இருப்பதாலும், குரு பலம் இந்த ஆண்டு முழுவதும் நிறைந்திருப்பதாலும், அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் நடக்கும். தெற்கு அல்லது வட கிழக்கு திசையில் சம்பந்தம் ஏற்படும். உடன் பிறந்தோரைக் கொண்ட, படித்த, மாநிறமுள்ள பெண் மனைவியாக அமைவார். அதேசமயம் லக்னம் மற்றும் குடும்ப ஸ்தானத்திற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். மற்றபடி உங்கள் மகனுக்கு புத்திரபாக்யத்துக்கும், ஆயுளுக்கும் குறைவு இல்லை. நீங்களும் உங்கள் மகனும் செய்துள்ள பரிகாரங்கள் போதுமானவை.

"நமசிவாய' ஜபிக்கவும்!

எனது மகனுக்கு எப்போது திருமணம் செய்யலாம்? இது ஒருபுறமிருக்க எனது கணவர் நல்ல உத்யோகத்தில் இருந்தார். தற்சமயம் அந்த வேலையை விட்டுவிட்டார். அவருக்கு வேறு நல்ல வேலை அமையுமா? ஏற்கெனவே பார்த்த உத்யோகத்தில் கிடைக்க வேண்டிய தொகை கிடைக்குமா?

க.சு.உஷா, சென்னை-39.


உங்கள் மகனுக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு திருமண முயற்சிகளைத் தொடங்கலாம். களத்ர ஸ்தானாதிபதி பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்தால் பார்க்கப்படுவதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். மற்றபடி படித்த, உத்யோகத்தில் உள்ள பெண் மனைவியாக அமைவார். மணவாழ்க்கை சீராகவே செல்லும்.

உங்கள் கணவருக்கு அடுத்த ஆண்டு அவரின் தகுதிக்கேற்ற நல்ல வேலை அமையும். அவருக்கு வர வேண்டிய தொகையில் பாதி அளவுக்குக் கிடைத்துவிடும். உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவ பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். தினமும் முடிந்த வரை "நமசிவாய' என்று ஜபிக்கவும்.

சொந்த வீடு அமையும்!

எனது மகனுக்கு எப்போது மழலை பாக்யம் கிடைக்கும்? காளஹஸ்தி, திருச்செந்தூர் ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டுள்ளோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? மேலும் எங்களுக்கு சொந்த ஊரில் சொந்தமாக வீடு அமையும் வாய்ப்பு உண்டா? எங்கள் குடும்பத்தில் எல்லா விஷயங்களிலும் ஒருவித மந்தமான நிலையே ஏற்படுகிறது. இந்த சூழ்நிலை எப்போது மாறும்?

க. குழந்தைவேல், சரவணம்பட்டி.


உங்கள் மகனுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்யம் உண்டாகும். அதற்காக நீங்கள் செய்துள்ள பரிகாரங்கள் போதுமானவை மற்றும் சரியானவை. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த ஊரிலேயே சொந்தமாக வீடு அமையும். மந்தநிலை நீங்க பிரதி சனிக் கிழமைகளில் சனி பகவானையும், பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

நிரந்தரப் பணி!

என் இரண்டாவது மகன் பி.இ. படித்து முடித்துவிட்டு மின் வாரியத்தில் அப்ரண்டீஸôகப் பணிபுரிந்தார். பிறகு கால் சென்டரில் உத்யோகம் பார்த்தார். தற்போது எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறார். அவருக்கு நல்ல வேலை கிடைக்குமா? மேலும் திருமணம் எப்போது நடக்கும்?

டி.வினாயகம், சென்னை-39


உங்கள் மகனின் ஜாதகப்படி தொழில் ஸ்தானாதிபதி, பூர்வ புண்ய ஸ்தானாதிபதியின் சாரத்தில் அமர்ந்துள்ளதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு அரசுத் துறையில் நிரந்தரப் பணி அமையும். 2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் சிவபெருமானையும், பிரதி திங்கள் கிழமைகளில் அம்பாளையும் வழிபட்டு வரவும்.

நல்ல இடத்தில் திருமணம்!

எனது மாமாவின் மகன் திருமணத்திற்காக பல ஆண்டுகளாக முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் எந்தப் பலனும் இல்லை. எப்போது அவனுக்குத் திருமணம் நடக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?

டி.கே. மீனாட்சி. ஹோசூர்.


உங்கள் மாமாவின் மகன் ஜாதகப்படி களத்ர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது. மற்றபடி அவருக்குக் குடும்பாதிபதி, பூர்வ புண்ய புத்திர ஸ்தானாதிபதி ஆகியோர் பலம் பெற்றுள்ளதால் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் திருமணம் நடக்கும். லக்னகேந்திரத்திற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

ஒரு பொழுது விரதம்!

எனக்கு 31 வயது ஆகிறது. ஆனால் திருமணம் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. எப்போது எனக்குத் திருமணம் நடக்கும்? மேலும் அரசு வேலை கிடைக்குமா?

ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்றிருப்பதும், குடும்ப ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பதும், புத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றிருப்பதும் வலுவான அமைப்பாகும். மேலும் சுக ஸ்தானமும் வலுவாக உள்ளது. அதே நேரத்தில் களத்ர ஸ்தானாதிபதி அசுப பலம் பெற்றிருப்பதால் திருமணம் தாமதப்படுகிறது. இதற்கேற்ற சமதோஷம் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும். மற்றபடி உங்களுக்கு 04.3.2012 வரை பூர்வ புண்ய புத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடப்பதாலும், குரு பலம் கூடியிருப்பதாலும் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் கை கூடும். அரசு அல்லது அரசு சார்ந்த உத்யோகம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. பிரதி வியாழக் கிழமைகளில் ஒரு பொழுது விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

பரிகாரம் தேவையில்லை!

எனது மகளுக்கு 33 வயதாகிறது. அவளுக்குத் திருமணம் நடப்பதில் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. எப்போது அவளுக்குத் திருமணம் நடக்கும்? நல்ல வரன் அமையுமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?

குணசேகரன், அரியூர்.


உங்கள் மகளுக்கு லக்னாதிபதி சுயசாரத்திலும், பாக்யாதிபதி பாக்ய ஸ்தானத்திலும் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. அதேநேரம் அஷ்டமாதிபதி அசுபர் சாரம் பெற்றிருப்பதும், சுகஸ்தானம் சிறிது பாதிப்பு அடைந்திருப்பதும் குறை. இதனால் திருமணம் தாமதப்படுகிறது. ஆனால் கவலைப்பட வேண்டாம். தற்சமயம் பாக்யாதிபதியின் புக்தி நடப்பதாலும், குருபலம் இந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு கூடியுள்ளதாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

படிப்படியான வளர்ச்சி!

எனது தொழிலில் நான் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளேன். இதனால் கடன் தொல்லையும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையால் என் மனைவியும் மிகுந்த விரக்தி அடைந்துள்ளார். என்னையும், எனது தாய், தந்தையரையும் வேண்டா வெறுப்பாக நடத்துகிறார். இந்த நிலை எப்போது மாறும்? எனது குடும்பத்தில் எப்போது நிம்மதி பிறக்கும்?

ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.


உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஜாதகப்படி 20.11.2012 வரை கடன்களும், மனதில் குழப்பங்களும் தொடரும். ஆனால் கவலைப்பட வேண்டாம். உங்கள் ஜாதகப்படி தொடரும் தசை லக்னாதிபதிக்கு பகை பெற்ற தசையாக இருந்தாலும் லக்னத்திற்கு சுபராக அமைவதால் (அசுபக்கிரகம் ஒரு கேந்திரத்திற்கு அதிபதியாக வருவதால்) படிப்படியான வளர்ச்சியையே கொடுப்பார். மற்றபடி பிரதி வியாழக் கிழமைகளில் குரு, தட்சிணாமூர்த்தியையும், பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும். விரைவில் உங்கள் குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும்.

அனுகூலமான தசா புக்திகள்!

எனது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? மேலும் அவனது உத்யோகம் எவ்வாறு செல்லும்?

என். லோகநாதன், கோவை.


உங்கள் மகனின் ஜாதகப்படி தொழில் ஸ்தானாதிபதி, லாப ஸ்தானத்தில், லாபாதிபதி மற்றும் சுக ஸ்தானாதிபதியுடன் இணைந்திருப்பதால் உத்யோகம் தொய்வில்லாமல் செல்லும். அடுத்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு சிறப்பான மாற்றங்கள் உண்டாகும். இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு அனுகூலமான தசா புக்திகள் நடக்கத் தொடங்கிவிட்டன. அதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமண முயற்சிகள் வெற்றி பெறும். லக்னம் மற்றும் குடும்ப ஸ்தானங்களுக்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்கவும்.

தொழில் வேண்டாம்!

எனக்கு 21 வயது ஆகிறது. தபால் மூலம் பி.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறேன். பகுதி நேரமாக செல்ஃபோன் பழுது பார்க்கும் கடை நடத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு தனியார் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் முகவராகவும் பணிபுரிகிறேன். நான் வேறு என்ன தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படும்?

ச.குமரகுருபரன், சின்னமனூர்.


நீங்கள் படித்து முடித்தவுடன் காப்பீடு, வங்கி போன்ற துறைகளில் அரசு உத்யோகத்திற்கு முயற்சி செய்யவும். உடனடியாகக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் செய்து வரும் தொழில்களை பகுதி நேரமாக வைத்துக் கொள்ளலாம். உங்கள் ஜாதகப்படி தொழில் செய்து முன்னேற முடியாது. பிரதி செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானையும், பிரதி சனிக் கிழமைகளில் சனி பகவானையும் வழிபட்டு வரவும். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்!

எனது மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா? அவன் மனதிற்குப் பிடித்த நல்ல குணமுள்ள மருமகள் அமைவாரா?

ஜி. தனுஷ்கோடி, காஞ்சிபுரம்.


உங்கள் மகனுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். லக்னம், குடும்பம் ஆகிய ராசிகளுக்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். களத்ர ஸ்தானாதிபதி அதிக வலுவாக உள்ளதால் உங்கள் மகனின் மனதிற்குப் பிடித்த பெண் மனைவியாக அமைவார். உங்களுக்கு ஏற்ற மருமகளாகவும் இருப்பார். தெற்கு அல்லது தென் மேற்கு திசையிலிருந்து அன்னிய சம்பந்தம் ஏற்படும். பெற்றோர் சம்மதத்துடனேயே திருமணம் நடக்கும்.

பெருமாளை வழிபடவும்!

எனது மகளுக்கு 26 வயது ஆகிறது. எப்போது அவருக்குத் திருமணம் நடக்கும்?

கே.வெங்கடசாமி, சென்னை-4


உங்கள் மகளின் ஜாதகப்படி லக்னாதிபதியும், பாக்யாதிபதியும் பூர்வ புண்ய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும், குரு பகவான் பாக்ய ஸ்தானத்தையும், லக்னத்தையும் பார்வை செய்வதும் சிறப்பாகும். மேலும் பூர்வ புண்ய ஸ்தானாதிபதியும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். அதே சமயம் லக்ன அசுபர்கள் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது குறை. இதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். மற்றபடி உங்கள் மகளுக்கு அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள் திருமணம் கைகூடும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும்.

கடன் தொல்லை தீரும்!

எனக்கு ஏற்பட்டுள்ள கடன் தொல்லை எப்போது தீரும்? ஷேர் மார்க்கெட்டில் எனக்கு முன்னேற்றம் ஏற்படுமா? அல்லது வேறு என்ன தொழில் செய்தால் முன்னேற்றம் காணலாம்?

மு.கனகராஜன், மடிப்பாக்கம்.


உங்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு கடன்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். 2012ஆம் ஆண்டு, ஜூன் மாதத்திற்குள் கடன் தொல்லை முழுமையாகத் தீரும். அதேசமயம் ஷேர் மார்க்கெட் உங்களுக்கு ஒத்துவராது. ரியல் எஸ்டேட், ஸ்டேஷனரி, நூல் பதிப்பு போன்ற துறைகளில் ஈடுபடலாம்.

பொறாமை விளையும்!

எனது மகன் எம்.சி.ஏ. முடித்து 3 வருடங்கள் ஆகிறது. ஒரு சிறிய சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிகிறார். அவருக்கு அதிக சம்பளத்துடன் வேறு நல்ல வேலை கிடைக்குமா? வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? மேலும் அவர் மீது சக ஊழியர் கொண்டுள்ள பொறாமை எப்போது நீங்கும்?

சி.வைரமணி, சேலம்-9.


உங்கள் மகனுக்குத் தொழில் ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அசுபர்சாரம் பெற்றுள்ளார். எனவே உத்யோகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தாலும் அவ்வப்போது சிறு சிறு குறைகள், பொறாமையால் விளையும் கெடுதிகள் போன்றவை இருக்கும். ஆனால் கவலைப்பட வேண்டாம். உங்கள் மகனுக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு உத்யோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பிரதி செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான திருப்பங்கள்!

எனது மகன் பி.இ. படித்துவிட்டு ஒரு கம்பெனியில் பணிபுரிகிறான். அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? அவன் வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? சொந்த வீடு கட்டும் வாய்ப்பு கிடைக்குமா? மேலும் என்னுடைய எதிர்காலம் எவ்வாறு அமையும்?

பெயர் வெளியிட விரும்பாத சேலம் மாவட்ட வாசகர்.


உங்கள் மகனுக்கு 21.6.2010 முதல் சுக ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளதாலும், அடுத்த ஆண்டு மே மாதம் வரை குரு பலம் நிறைந்திருப்பதாலும் திருமணம் கைகூடும். அவருக்கு சர்ப்பதோஷமுள்ள பெண்ணாகப் பார்க்கவும். மற்றபடி 2013ஆம் ஆண்டுக்குள் நிலம் வாங்கி விடுவார். அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து வீடு கட்டுவார். வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு. உங்கள் ஜாதகப்படியும் 2012ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.

வட மேற்கு திசையில் சம்பந்தம்!

எனது மகனுக்கு 35 வயது ஆகிறது. எம்.காம் படித்துள்ளான். தற்போது விவசாயம் செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும்? மேலும் திருமணம் எப்போது நடக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?

வசந்தா, தென்பதி.


உங்கள் மகனின் ஜாதகப்படி லக்னத்தில் உள்ள பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகங்கள் திருமண தாமதத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண்ணாகப் பார்க்க வேண்டும். அவரை தனியார் துறையில் வங்கி, காப்பீடு நிறுவனங்களில் உத்யோகத்திற்கு முயற்சி செய்யச் சொல்லவும். மற்றபடி இந்த ஆண்டுக்குள் உத்யோகம் கிடைக்கும். திருமணமும் நடக்கும். வட மேற்கு திசையிலிருந்து சம்பந்தம் ஏற்படும். பிரதி சனிக் கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
Comments

Post your comments *
Email *
Name *
Verification Code *
Enter numbers shown in image *

Note: Comments may be moderated by our editors.