09 Feb 2010 12:00:00 AM IST

பங்குச் சந்தை செயல்பாட்டை ஆய்வு செய்ய குழு நியமனம் 

மும்பை,​​ பிப்.8:​ பங்குச் சந்தைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய தனிக் குழுவை இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் ​(செபி)​ ஏற்படுத்தியுள்ளது.​ இந்தக் குழுவின் தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் நியமிக்கப்பட்டுள்ளார்.​ ​பங்குச் சந்தைகள் அனைத்தும்,​​ வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்குள் செயல்படுகின்றனவா என்பதை இக்குழு ஆராயும்.​ ​
 பங்குச் சந்தையில் உரிய கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பதையும் இக்குழு ஆராயும் என்று "செபி' வெளியிட்ட அறிக்கையில் ​ தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ஏற்கெனவே செயல்பட்டு வரும் பங்குச் சந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கண்டறிவதோடு,​​ எதிர்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட உள்ள பங்குச் சந்தைகளில் இத்தகைய பிரச்னைகள் ஏற்படாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளை இக்குழு அளிக்கும் என்று சிஎன்ஐ ஆய்வு மையத்தின் நிர்வாக இயக்குநர் கிஷோர் ஆஸ்ட்வால் தெரிவித்தார்.​ ​
பங்குச் சந்தையில் உறுப்பினர்களின் பங்கு 51 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என ஏற்கெனவே அரசு அனைத்து பங்குச் சந்தைகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தது.​
புதிதாக அமைக்கப்பட்ட குழுவில் நிதி அமைச்சக இணைச் செயலர் கே.பி.​ கிருஷ்ணன்,​​ டாடா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் கிஷோர் செüகர்,​​ கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோடக்,​​ தேசிய செக்யூரிட்டீஸ் வர்த்தக மையத்தின் சிறப்பு அதிகாரி ஜி.​ சேது,​​ செபியின் முழு நேர இயக்குநர் கே.எம்.​ ஆப்ரஹாம்,​​ செபி செயல் இயக்குநர் ஜேஎன் குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

© Copyright 2008 Dinamani