09 Feb 2010 12:00:00 AM IST
பாகிஸ்தான் அணியிலிருந்து அக்மல், சல்மான் பட் நீக்கம்
கராச்சி, பிப். 8: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருந்து மூத்த வீரர்கள் கம்ரான் அக்மல், சல்மான் பட் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
சோயப் மாலிக்கிடம் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் இன்டிகப் ஆலமும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் அணி மோசமாகத் தோல்வியடைந்ததை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த அதிரடியான முடிவை எடுத்துள்ளது.
துபையில் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகள் இங்கிலாந்து அணிக்கு எதிரான 20-20 போட்டிகளில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமை அறிவித்தது. 20-20 போட்டி அணியின் கேப்டன் அப்ரிதி பந்தை கடித்து சேதப்படுத்தியதால் இரண்டு 20-20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாலிக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மூத்த வீரர்கள் கம்ரான் அக்மல், சல்மான் பட், வேகப் பந்து வீச்சாளர் இப்திகார், முகமது ஆசிஃப் ஆகியோரின் பெயர்கள் அணி வீரர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.
ஆல் ரவுண்டர் அப்துல் ரஸôக், யாசீர் அராபத் ஆகியோர் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். இளம் வேகப் பந்து வீச்சாளர்கள் வாகாப் ரியாஸ், முகமது தால்ஹா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
20-20 அணியின் பயிற்சியாளராக முன்னாள் டெஸ்ட் வீரர் இஜாஸ் அகமதுவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய பயிற்சியாளர் இன்டிகப் ஆலமின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. அவர் தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளாரா, அல்லது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளாரா என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. அவரது ஒப்பந்தம் அக்டோபரில்தான் முடிவடையவுள்ளது.
அப்ரிதி மீது நடவடிக்கை இல்லை: இதனிடையே அப்ரிதி மேல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று அதன் தலைவர் இஜாஸ் பட் தெரிவித்துள்ளார்.
ஐசிசி அவருக்கு ஏற்கெனவே தண்டனை விதித்துவிட்டது. அதே குற்றத்துக்காக அவருக்கு மீண்டும் தண்டனை விதிக்கும் எண்ணம் இல்லை. அவர் செய்த காரியம் முற்றிலும் தவறானதுதான். அணிக்கு அவப்பெயரைத் ஏற்படுத்திவிட்டார் என்று பட் மேலும் கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது அப்ரிதி பந்தை வாயில் வைத்து கடித்து சேதப்படுத்தியதால் அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்தது.