07 Mar 2010 12:00:00 AM IST

இலங்கைப் போரில் மனித உரிமை மீறல்: ஐ.நா. விசாரிக்க ராஜபட்ச எதிர்ப்பு 

கொழும்பு, மார்ச் 6: இலங்கை போரின் போது நிகழ்ந்த மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கும் ஐ.நா.வின் நடவடிக்கைக்கு அந்நாட்டு அதிபர் ராஜபட்ச கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் இலங்கை ராணுவம் பல்வேறு மனித உரிமை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், தமிழர் பகுதியில் வெடிகுண்டுகளை வீசி பலரை வேண்டுமென்றே கொலை செய்ததாகவும், ராணுவத்தினரிடம் பிடிபடும் பெண்கள் உள்பட பலரை சித்ரவதை செய்து கொன்றதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இது தொடர்பான சில விடியோ பதிவுகளும் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா. குழு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள ராஜபட்ச, "இந்த நடவடிக்கையை இலங்கை ஏற்றுக் கொள்ளாது. இதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை' என்று கூறியுள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் -கி- மூன், ராஜபட்சவுடன் கடந்த வியாழக்கிழமை தொலைபேசியில் பேசினார்.

© Copyright 2008 Dinamani