செயற்கை மூட்டினை வாழ்க்கை முழுவதும் நீடிக்கச் செய்வது எப்படி?
First Published : 31 Jul 2010 01:29:13 AM IST
Last Updated :
சென்னை, ஜூலை 30: "டெல்டா செராமிக்'கினால் (பீங்கான்) செய்யப்பட்ட செயற்கை மூட்டுகள் நீண்ட காலம் உழைக்கக் கூடியவை என்று மியாட் மருத்துவமனையின் முடநீக்கியல் நிபுணரும் இந்திய-ஜெர்மன் முடநீக்கியல் அறக்கட்டளைச் செயலருமான டாக்டர் ப்ர்த்வி மோகன்தாஸ் கூறினார். மூட்டு மாற்று சிகிச்சை-முதுகுத் தண்டு அறுவைச் சிகிச்சை-விபத்து அறுவைச் சிகிச்சை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால முன்னேற்றம் குறித்து முடநீக்கியல் நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கும் மூன்று தின முதுநிலை மருத்துவப் படிப்பு நிகழ்ச்சிக்கு சென்னை மியாட் மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த முடநீக்கியல் நிபுணர்கள் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து 300 நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பி.வி.மோகன்தாஸ், டாக்டர் ப்ர்த்வி மோகன்தாஸ், இந்திய முடநீக்கியல் அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் தேவதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:- மூட்டு மாற்று சிகிச்சையில் இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சை ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னேற்றம் அடைந்து வந்துள்ளது. 1970-ம் ஆண்டுகளில் உலோகத்தினால் செய்யப்பட்ட செயற்கை மூட்டுகளை பொருத்தும் நிலையில், எலும்புகளில் சிதைவை ஏற்படுத்தியதுடன் செயற்கை மூட்டை தளர்வாகவும் ஆக்கியது. 1980, 1990-ம் ஆண்டுகளில் இடுப்பு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு "குரோமியம் கோபால்ட்' உலோக செயற்கை மூட்டு பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இத்தகைய உலோக செயற்கை மூட்டுகள் காரணமாகவும் சிதைவுகள் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு மீண்டும் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது.சிறந்தது எது? இந்நிலையில் மிகக் குறைந்த உராய்தலுடன் எலும்புகளில் சிதைவினை ஏற்படுத்தாத செராமிக் (பீங்கான்) மூட்டுகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதாவது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "டெல்டா செராமிக்' மூட்டுகள் மிக அதிக வலுவைக் கொண்டுள்ளது. இது கப்பல் கட்டமைப்பு மற்றும் ஆட்டோமோபைல் தொழில் துறையிலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் அதிகபட்ச உறுதித் தன்மை காரணமாக பெரும் அழுத்தத்தையும் சமாளிக்க முடியும். மியாட் மருத்துவமனையில் டெல்டா செராமிக் செயற்கை மூட்டு தொழில்நுட்ப அடிப்படையில் 372 இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக 40 வயதுக்குக் கீழே உள்ளோரில், இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்படும் நிலையில், இத்தகைய "டெல்டா செராமிக்' மூட்டு நீண்ட காலம் உழைத்து அவர்கள் துடிப்பாகச் செயல்பட உதவும்'' என்று அவர்கள் தெரிவித்தனர். முடநீக்கியல் முதுநிலை பயிற்சி வகுப்பை முன்னிட்டு நேரடி முடநீக்கியல்-மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செயல் விளக்கங்களும் மருத்துவச் சொற்பொழிவுகளும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளன.