ரயில் நிலையத்துக்குள் டவுன் பஸ்கள் இன்று முதல் நின்று செல்ல ஏற்பாடு
First Published : 30 Jul 2010 09:06:41 AM IST
Last Updated :
மதுரை, ஜூலை 29: மதுரையில் ரயில்வே நிலையத்துக்குள் அரசு டவுன் பஸ்கள் நின்று செல்ல வெள்ளிக்கிழமை முதல் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக, ரயில் நிலையம் முன் பஸ் நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் பஸ் போக்குவரத்து சிக்கலைத் தீர்க்க போலீஸôர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ரயில்வே நிலையம் முன் மேலவெளி வீதியில் (மங்கம்மாள் சத்திரம் முன்பாக) இருந்த டவுன் பஸ் நிறுத்தத்தை ரயில் நிலைய வளாகத்துக்குள் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மதுரை ரயில் நிலைய அதிகாரிகளுடன் மாநகர் போலீஸ் கமிஷனர் பி. பாலசுப்பிரமணியன், போக்குவரத்து துணைக் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி, போக்குவரத்தை மாற்ற முடிவு செய்தனர். அதன்படி, பெரியார் பஸ் நிலையப் பகுதியிலிருந்து வரும் டவுன் பஸ்கள் அனைத்தும் ரயில் நிலையத்தின் முன்புள்ள மீன் உருவங்களில் நீர் கொட்டும் அமைப்பினை ஒட்டிய சாலையில் திரும்பி, ரயில் நிலையத்துக்குள் அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லும். பின்னர், சரக்கு கையாளும் பிரிவு பகுதி வழியாக வெளியே செல்லும். இந்த போக்குவரத்து மாற்றத்தை, வெள்ளிக்கிழமை காலை மதுரை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் மாநகர் போலீஸ் அதிகாரிகள் தொடங்கி வைக்கின்றனர். ஏற்கெனவே, கட்டபொம்மன் சிலை ரவுண்டான அகலம் குறைக்கப்பட்டு போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல, சேதுபதி மேல்நிலைப் பள்ளி பகுதியிலிருந்து திருப்பரங்குன்றம் பகுதிக்குச் செல்லும் வாகனங்களை மேலமாரட் வீதி வழியாக திருப்பி விட்டிருப்பதும் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.