இரு கிராமங்கள் இடையே கால்வாய் பிரச்னையில் சமரசம்
First Published : 30 Jul 2010 10:18:38 AM IST
Last Updated :
திருவாடானை, ஜூலை 29: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, ஆர்.எஸ் மங்கலம் அருகே சேத்திடல் கிராமத்துக்கும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள திருக்கல்லி கிராமத்துக்கும் இடையே ஏற்பட்ட வரத்துக் கால்வாய் பிரச்னை தொடர்பாக திருவாடானை வட்டாட்சியர் முருகேசன் தலைமையில் சமரசக் கூட்டம் நடைபெற்றது. சேத்திடல் கிராமத்துக்கும், திருகல்லி கிராமத்துக்கும் சேத்திடல் கண்மாய்க்கு வரும் நீர் வரத்தைத் தடுப்பது சம்பந்தமாக சிவகங்கை மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியர் பொன்னையா, ராமநாதபுரம் மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியர் பிரபாகரன் முன்னிலையில், திருவாடானை வட்டாட்சியர் முருகேசன் தலைமையில் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் வியாழக்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இரு மாவட்ட எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.இரண்டு மாவட்ட நில அளவர் மூலம் வரும் ஆக. 6-ம் தேதி அளந்து கொள்வது என்றும், (சர்வே எண் 509, 510, 515, 516 மற்றும் 549) சேத்திடல் கண்மாய்க்கு வரும் நீர் வரத்தை திருகல்லி கிரமத்தினர் தடுக்கக் கூடாது என்றும், மண் அரிப்பைத் தடுக்கும் பட்சத்தில் கட்டுமான பணி நடக்கும் பட்சத்தில் சமமான முறையில் கட்டப்பட வேண்டும். வரத்துக் கால்வாய்களில் உள்ள கருவேல மரங்களை அந்தந்தப் பகுதி வட்டார அலுவர்கள் பொது ஏலம் விடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனை இரண்டு கிராமத்தினரும் சமாதானமாக ஏற்றுக் கொண்டனர்.