வீடு புகுந்து நகை திருடியவர் கைது
First Published : 30 Jul 2010 10:19:25 AM IST
Last Updated :
சாயல்குடி, ஜூலை 29: ஏர்வாடி அருகே வீட்டில் புகுந்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார். சின்ன மாயா குளத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். திறந்திருந்த இவரது வீட்டில் பீரோவைத் திறந்து 2 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. வீட்டுக்கு வந்த தர்மலிங்கம் மகன் பூமிநாதன் (19) சங்கிலி திருடு போனதைக் கண்டார். வெளியே வந்து பார்த்ததில் வீட்டின் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவரைப் பிடித்து ஏர்வாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் சங்கிலியைத் திருடியவர் அவர்தான் என்றும், அவர் ராமநாதபுரம் சத்யா நகர் பாக்கியம் மகன் பாலகிருஷ்ணன் (32) என்பதும் தெரிய வந்தது. பாலகிருஷ்ணனை போலீஸ் சப்-இன்ஸபெக்டர் தில்லைராஜன் கைது செய்தார். நெய்வயல் சாலை பழுது: பஸ்கள் நிறுத்தப்படுவதாக அதிகாரி தகவல்திருவாடானை, ஜூலை 29: திருவாடானை தாலுகா நெய்வயல் சாலை பழுது காரணமாக பஸ்கள் நிறுத்தப்படும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரி தெரிவித்துள்ளார். திருவாடானையில் இருந்து ஓரிக்கோட்டை, மங்களக்குடி வழியாக நெய்வயல் அதங்குடி, தேவகோட்டை செல்லும் சாலை பழுது காரணமாக, அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளதால், இந்தப் பகுதியில் உள்ள சுமார் 100 கிராமங்களில் இருந்து தேவகோட்டை, திருவாடானை போன்ற பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, நெய்வயல் ஊராட்சி மன்றத் தலைவர் ராமநாதன் கூறுகையில், இதனால், இப்பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மெயின் சாலையை சென்றடைய சுமார் 10 கி.மீ. தூரம் செல்ல வேண்டும் என்றார். திருவாடானை ஒன்றியத் தலைவர் மேகலா விஸ்வநாதன் கூறுகையில், நெய்வயல் சாலை பழுது காரணமாக பஸ்கள் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதால், கடந்த 12-ம் தேதி நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்றார்.