சுந்தரபாண்டியபுரத்தில் சாமி சிலை அகற்றம்: மக்கள் போராட்டம்
First Published : 29 Jul 2010 01:04:45 PM IST
Last Updated :
சுரண்டை, ஜூலை 28: சுரண்டை அருகேயுள்ள சுந்தரபாண்டியபுரத்தில் சாமி சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மீண்டும் அதே இடத்தில் சாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுந்தரபாண்டியபுரம் குளத்தின் தென்புறம் ஐயனார் கோயில் உள்ளது. கோயிலின் எதிரே புதியவன்சாமியின் எதிர்பீடம் அமைந்துள்ளது. கடந்த மாதம் இப் பீடம் இருந்த இடத்தில் புதியவன்சாமி சிலையை மக்கள் பிரதிஷ்டை செய்து 40 நாள் மண்டல பூஜை நடத்தி வந்தனர். ஆனால், சிலை பிரதிஷ்டை செய்த இடம் அரசுப் புறம்போக்கு எனக் கூறி வருவாய்த் துறையினர் சாமி சிலையை அகற்றி, சுந்தரபாண்டியபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இந்நிலையில், புதன்கிழமை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ஆறுமுகச்சாமி, சாக்ரடீஸ், குருசாமி, பாஜக மாவட்ட நிர்வாகிகள் பாண்டித்துரை, முருகேசன், விஜயக்குமார் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் திரண்டனர். அகற்றப்பட்ட சாமி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக் கோரி சுந்தரபாண்டியபுரம் கிராம நிர்வாக அலுவலர் லுவலகம் முன் போராட்டம் நடத்தினர். தென்காசி வட்டாட்சியர் பரமசிவன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தினார். முடிவில், அகற்றப்பட்ட சாமி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க அதிகாரிகள் முன்வந்ததுடன் சாமி சிலையை பொதுமக்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து உரிய பரிகார பூஜைகள் செய்யப்பட்டு, சாமி சிலை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி, சாம்பவர்வடகரை காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அசோகன் தலைமையில் போலீஸôர் குவிக்கப்பட்டிருந்தனர்.