ஆக. 17 மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்
First Published : 30 Jul 2010 11:27:08 AM IST
Last Updated :
காரைக்கால், ஜூலை 29: புதுவையில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக அமையும் என்றார் அந்தக் கட்சியின் மாநிலச் செயலரும், எம்எல்ஏவுமான நாரா. கலைநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரியில் புதன்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அக்கட்சியின் மாநிலச் செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நாரா. கலைநாதன், சட்டப்பேரவை உறுப்பினர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுவையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டுக்காக, கட்சியின் காரைக்கால் மாவட்டம் சார்பில் ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை காரைக்கால் பொறுப்பாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான பி. தங்கராசு, மாநிலச் செயலரிடம் வழங்கினார். இந்தக் கூட்டத்தில் மாநில செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நாரா. கலைநாதன் பேசியது: புதுவையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டன. இந்த ஆட்சிக்கு மாற்றாக புதிய அணி உருவாக்கப்பட்டு, புதிய ஆட்சி அமைக்கப்படும். ஆகஸ்ட் 17ஆம் தேதி புதுவையில் நடைபெறவிருக்கும் கட்சியின் மாநில மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றார் அவர். கூட்டத்துக்கு கட்சியின் கோட்டுச்சேரி கிளைச் செயலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும் காரைக்கால் பொறுப்பாளருமான பி. தங்கராசு, நிர்வாகிகள் தினேஷ் பொன்னையா, வி.எஸ். சிவம், மதியழகன் உள்ளிட்ட பலர் பேசினர்.