திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொறுப்பேற்பு
First Published : 30 Jul 2010 11:28:20 AM IST
Last Updated :
திருவாரூர், ஜூலை 29: திருவாரூர் மாவட்ட ஊராட்சியின் 17-வது வார்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே. முருகையன் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். திருவாரூர் மாவட்ட ஊராட்சியின் 17-வது வார்டு உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. பக்கிரிசாமி அண்மையில் காலமானார். இதனால் அந்த வார்டில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே. முருகையனும், திமுக சார்பில் எம்.ஆர். கண்ணன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே. முருகையன் வெற்றி பெற்றார். திருவாரூர் மாவட்ட ஊராட்சியின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் செ. கமலவதனம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கே. உலகநாதன் பங்கேற்றார். புதிய உறுப்பினர் கே. முருகையனுக்கு தலைவர் செ. கமலவதனம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் நாகை மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினர் எம். செல்வராசு, மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வை. செல்வராஜ், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் எம். கல்யாணசுந்தரம் (முத்துப்பேட்டை), பி.ஆர். பாண்டியன் (கோட்டூர்), தமிழ்ச்செல்வி (திருத்துறைப்பூண்டி), ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் இரெ. ஞானமோகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ப. கண்ணையன் (அதிமுக), கோமதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோர் புதிய உறுப்பினரை வாழ்த்திப் பேசினர்.திமுக கூட்டணி புறக்கணிப்பு: இந்தக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.