ஆதரவாளர்களுக்கு அநீதி: ஜெகன்மோகன் ரெட்டி வேதனை
First Published : 30 Jul 2010 05:09:03 AM IST
Last Updated :
ஹைதராபாத், ஜூலை 29: காங்கிரஸ் கட்சியில் தனது ஆதரவாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.காக்கிநாடாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது: ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் யாத்திரை மேற்கொண்டு வருகிறேன். இந்த யாத்திரையை தொடங்கும்போது யாரும் எந்த கருத்தும், எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், எனக்கு மக்கள் அளித்த ஆதரவைக் கண்டு யாத்திரையை அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜசேகர ரெட்டிக்காக உயிர்நீத்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆறுதல் கூறவில்லை, எந்த உதவியும் செய்யவில்லை.பொறுமை இழக்கிறேன்: எனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் கொண்டா சுரேகா, முன்னாள் எம்எல்ஏ ராம்பாபு ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராம்பாபு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற அநீதிகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்து வருகிறேன் என்றார்.