சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் ஆதரவின்றி உலகத் தமிழ் மாநாடா? ஜெயலலிதா கேள்வி
First Published : 25 Sep 2009 12:10:23 PM IST
Last Updated :
25 Sep 2009 12:24:04 PM IST
சென்னை, செப். 25: சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் அனுமதியில்லாமல் தமிழக அரசால் தன்னிச்சையாக மாநாடு நடத்தப்படுமானால், அது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு என்ற தகுதியைப் பெற முடியாது என ஜெயலலிதா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள். 1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய மலேசிய தமிழர்கள் இன்று அந்த நாட்டின் இரண்டாம்தர குடிமக்களாக துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு, தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், மலேசியத் தமிழர்கள் தெருக்களுக்கு வந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்த போது, அந்த நாட்டு அரசாங்கத்தால் கொடூரமாக அடக்கப்பட்டனர். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கருணாநிதி குரல் எழுப்பவில்லை.1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய இலங்கைத் தமிழர்கள், இன்று தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் முகாம்களில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இனப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோது கருணாநிதி குரல் கொடுக்கவில்லை.இந்தச் சூழ்நிலையில், 2010 ஜனவரியில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் நடத்தப்போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த 'உலகத் தமிழ் மாநாடு' கருணாநிதியை உயர்த்திக் கொள்வதற்காக அறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியே தவிர, இதனால் தமிழ் மொழிக்கு எந்தப் பயனும் இல்லை. இதற்கு முன்பு நடைபெற்ற எட்டு உலகத் தமிழ் மாநாடுகளும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டன. தற்போதைய 'உலகத் தமிழ் மாநாடு' அறிவிப்பில் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் குறித்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக 2010ஆம் ஆண்டு மாநாடு நடத்தப்படுமானால், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு என்ற தகுதியை அந்த மாநாடு பெற முடியாது. இவ்வாறு ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.