திருவாரூர், செப்.30- மத்திய கல்வி நிலையங்களில் மாநிலங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் தொடக்க விழாவில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அபோது கருணாநிதி பேசியதாவது:
1967ம் ஆண்டுக்கு முன் தமிழ்நாட்டிலே இருந்த கலைக் கல்லூரிகள் 105. 1967ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 1975ஆம் ஆண்டு வரை தி.மு.க. அரசு காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கலைக் கல்லூரிகளுடைய எண்ணிக்கை 78 ஆக மொத்தம் 183 கல்லூரிகள்.
1996-2001 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசின் சார்பில் இரண்டு மகளிர் கலை - அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, சுயநிதி அடிப்படையிலே 125 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
இவையெல்லாம் சொல்வதற்குக் காரணம், நாம் ஆரம்ப பள்ளிக்கூடத்தோடு நிற்கவில்லை. அதற்குப் பிறகு கிராமப்புறத்து மக்களை விழிப்புறச் செய்வதற்காக அவர்களுக்கு கல்வி அறிவு ஊட்டுவதற்காக கல்லூரிகளையும் தொடங்கினோம். இப்பொழுது மேலும் அதை ஊக்கப்படுத்த அவர்களுக்கு ஆக்கம் அளிக்க பல்கலைக்கழகங்களையும் தொடங்கியிருக்கிறோம்.
மத்தியப் பல்கலைக் கழகத்தை இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கின்ற மத்திய கல்வி அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாடு முழுவதிலுமுள்ள மத்தியப் பல்கலைக் கழகங்களில், இந்திய மேலாண்மை நிறுவனங்களில், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் - அவை எந்த மாநிலத்தில் உள்ளனவோ, அந்த மாநிலத்தைச் சேர்ந்த 50 சதவிகித மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது என்ற அந்த உரிமையைக் கொடுத்து, தமிழ்நாட்டிலும் ஐம்பது சதவிகித மாணவர்களுக்கு, இங்கே அமையும் மத்திய பல்கலைக்கழகத்திலே இடம் ஒதுக்க வழிசெய்ய வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.