பெரியாறு அணையில் நீர்க் கசிவு இல்லை: கேரளத்துக்கு தமிழகம் பதில்
First Published : 22 Nov 2009 11:03:00 PM IST
Last Updated :
சென்னை, நவ. 21: ""முல்லைப் பெரியாறு அணையில் நீர்க் கசிவு இல்லை. அணை பாதுகாப்பாக உள்ளது'' என்று மத்திய அரசின் நீர்வளத் துறை செயலாளருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.முல்லைப் பெரியாறு அணையின் 18-வது பிரிவில் நீர்க் கசிவு ஏற்பட்டிருப்பதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில், "17 மற்றும் 18-வது பிரிவை இணைக்கும் பகுதியில் ஊற்றப்பட்டு இருந்த தார்க் கலவை உருகியுள்ளதே தவிர, அதை நீர்க்கசிவு என்று கருத முடியாது. இது, அடிக்கடி மேற்கொள்ளப்படும் மராமத்துப் பணிகளால் சீர்செய்யப்படும்' என தமிழக அரசு கூறியுள்ளது.முல்லைப் பெரியாறு அணையை, தமிழக பொதுப்பணித் துறையின் அணை பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைமை பொறியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் கடந்த 4 நாள்களாக ஆய்வு செய்தனர்.அவர்கள் சேகரித்த தகவல்கள் குறித்து, பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம் மத்திய நீர்வளத் துறை செயலாளருக்கு சனிக்கிழமை எழுதிய கடிதம்:""முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டம் 135.10 அடியாக இருக்கும்போது, நீர்க் கசிவின் அளவு நிமிடத்துக்கு 58.46 லிட்டர்களாக உள்ளது. இது, அனுமதிக்கப்பட்ட நீர்க் கசிவு அளவைவிடக் குறைவாகும்.அணையின் 17 மற்றும் 18 வது பிரிவுகள் தார்க் கலவைகளால் இணைக்கப்பட்டுள்ளன. பருவநிலை காரணமாக, தார்க் கவலைப் பகுதி வெளியே வந்துள்ளது. இது, வழக்கமாக மேற்கொள்ளப்படும் மராமத்துப் பணிகளில் சீர் செய்யப்படும். மற்றபடி, அணையில் வேறு எந்த நீர்க் கசிவும் இல்லை.முக்கிய அணை, பேபி அணை மற்றும் உபரி நீர் வெளியேறுவதற்கான அம்சங்கள் ஆகியன முல்லைப் பெரியாறு அணையில் நல்ல நிலையில் உள்ளன. அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாதுகாப்பாக உள்ளது என அதை ஆய்வு செய்த தமிழக பொறியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.முல்லைப் பெரியாறு அணையில் நீர் கசிவு இருப்பதாக கேரள அரசு கூறியதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வர இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன'' என்று பொதுப்பணித் துறை செயலாளர் ராமசுந்தரம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.