முக்கிய சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் பங்கு அவசியம்: அமெரிக்கா
First Published : 07 Mar 2010 12:00:00 AM IST
Last Updated :
வாஷிங்டன், மார்ச், 6: இந்த நூற்றாண்டில் உலகம் எதிர் கொண்டிருக்கும் அனைத்து சவால்களையும் எதிர் கொள்ள இந்தியாவின் பங்களிப்பு அவசியம் என தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் ப்ளேக் கூறியிருக்கிறார். அமெரிக்காவில் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாதிரி ஐக்கிய நாடுகள் சபைக் கருத்தரங்கில் அவர் உரையாற்றினார். கருத்தரங்கில் அவர் பேசியது: உலகப் பொருளாதார மந்த நிலை, பருவ நிலை மாற்றம், ஆயுதப் பரவல் தடுப்பு, தீவிரவாத ஒழிப்பு போன்ற முக்கிய பிரச்னைகளை எதிர் கொள்ள இந்தியாவின் பங்களிப்பு அவசியம். கடந்த காலங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா சபையில் வெவ்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. ஆனால் தற்போது இரு நாடுகளும் ஒத்தக் கருத்துடன் செயல்பட்டு வருகின்றன. அணி சேரா நாடுகளில் இந்தியா முக்கியமான நாடு. காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளில் ஐ.நா தலையீட்டை இந்தியா எதிர்க்கிறது. இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா வில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கேட்டு வருகின்றன. அமெரிக்காவின் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்துள்ளது. பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு நடத்திய பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரித்துள்ளது என ராபர்ட் ப்ளேக் கூறினார்.