சிறப்புபó பொருளாதார மண்டலங்களுக்கு வரிச் சலுகை தொடர வேண்டும்: வர்த்தக அமைச்சகம் கோரிக்கை
First Published : 06 Oct 2009 11:22:00 PM IST
Last Updated :
புது தில்லி, அக். 5: சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வரிச் சலுகைகள் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சகத்துக்கு மத்திய வர்த்தக அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் வரிச் சீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை சுற்றுக்கு விட்டுள்ளது. இது எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டமாகக் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. புதிய வரி பரிந்துரையில் லாபமீட்டும் அனைத்து நிறுவனங்களுக்கும் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இது குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஏற்கெனவே நிதி அமைச்சகத்துக்கு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வலியுறுத்தியுள்ளன. மேலும் தற்போது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் செயல்படும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் தொடருமா? என்றும் அவை கேள்வியெழுப்பியுள்ளன. இந்நிலையில் வரிச் சலுகைகள் தொடர வேண்டும் என நிதியமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளதாக வர்த்தக அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய வரி சீரமைப்பு பரிந்துரையில் தற்போது சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிக்கும் சலுகைகள் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக இத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். வரிச் சலுகைகள் தொடரும்பட்சத்தில்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அன்னிய முதலீடுகளை ஈர்க்க முடியும் என வர்த்தக அமைச்சகம் உறுதியாக நம்புகிறது. அத்துடன் தற்போது அளிக்கப்படும் சலுகைகளும் தொடர வேண்டும் என்று கருதுகிறது. தற்போது உள்ள வரிச் சலுகையின்படி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமையும் தொழிற்சாலைகளுக்கு 100 சதவீத வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இதன்படி நிறுவனம் செயல்படத் தொடங்கியதிலிருந்து முதல் 5 ஆண்டுகளுக்கு இந்தச் சலுகை அளிக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 50 சதவீத வரிச் சலுகையும், அதையடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்களது லாபத்தை மீண்டும் முதலீடு செய்தால் 50 சதவீத சலுகையும் அளிக்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் 579 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு முதல் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 335 நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் இதுவரை ரூ. 110 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 1 லட்சம் கோடி பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளது.