பெட்ரோல் விலை உயராது: தேவ்ரா
First Published : 17 Oct 2009 10:23:00 PM IST
Last Updated :
19 Oct 2009 06:32:42 PM IST
புது தில்லி, அக். 16: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படமாட்டாது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தேவ்ரா கூறினார். தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 78 டாலராக உயர்ந்துள்ளது. இருப்பினும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் அதன் மூலம் 10 சதவீதம் ஈடுகட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிவைச் சந்தித்தபோது எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 126 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இது தற்போது ரூ. 96 கோடியாகக் குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது ரூபாயின் மாற்று மதிப்பு மிகவும் செüகர்யமான நிலையில் உள்ளது. இதே நிலை தொடர வேண்டும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் சர்தக் பெஹுரியா தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ரூ. 21,825 கோடி நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டது. தற்போது இது ரூ. 19,790 கோடியாகக் குறைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மூலம் ரூ. 204.51-ம் மண்ணெண்ணெய் விற்பனை மூலம் லிட்டருக்கு ரூ. 16.14-ம் நஷ்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் தினசரி ரூ. 52 கோடி நஷ்டம் ஏற்படுவதாக பெஹுரியா மேலும் கூறினார். தற்போதைய நிலவரப்படி மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ. 34,820 கோடி நஷ்டம் ஏற்படுவதாக அவர் கூறினார். எண்ணெய் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நஷ்டம் கடன் பத்திர வெளியீடு மூலம் ஈடுகட்டப்படும் என்று பெட்ரோலியத்துறைச் செயலர் ஆர்.எஸ். பாண்டே தெரிவித்தார்.