மெரீனா கடற்கரையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் முதல்வருக்கு அழைப்பு
First Published : 04 Nov 2009 03:12:26 AM IST
Last Updated :
சென்னை, நவ. 3: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை (ஜனவரி 14) சென்னை மெரீனா கடற்கரையில் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. அதில் முதல்வர் கருணாநிதி கலந்துகொள்ள வேண்டும் என அந்தச் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக திரைப்பட இயக்குநர் சங்க நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியை சென்னையில் செவ்வாய்க்கிழமை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் விவரம்: வரும் ஜூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பங்கு பெற்று ஒரு வரலாற்று நாடகம் நடத்த அனுமதிக்க வேண்டும். ஆங்கிலப் புத்தாண்டு, சீனப் புத்தாண்டு போல தமிழ்ப் புத்தாண்டையும் வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாகக் கொண்டாட வேண்டும். அதற்காக, வரும் 2010-ம் ஆண்டு ஜனவரி 14, 15, 16 தேதிகளில் மெரீனா கடற்கரையில் தமிழின் சிறப்புகளையும் தமிழ்ப் பண்பாட்டையும் விளக்கும் கலைநிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் போன்றவற்றை நடத்த அனுமதி அளித்து, அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.