"தமிழை உலகுக்கு கொண்டு செல்ல வேண்டும்'
First Published : 14 Jul 2010 02:21:42 AM IST
Last Updated :
சென்னை பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பிரெஞ்சுத் துறை தலைவர் சித்ரா கிருஷ்ணனுக்கு செவாலியர் டெஸ் பால்ம்ஸ் அகாடெமிக்ஸ் விருதை வழ
சென்னை, ஜூலை 13: தமிழை உலகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் ஜெரோம் பொன்னஃபோன்ட் கூறினார். பிரெஞ்சு தூதர் ஜெரோம் பொன்னஃபோன்ட் சென்னை பல்கலைக்கழகத்தை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் செனட் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுத் துறை தலைவர் சித்ரா கிருஷ்ணனுக்கு செவாலியர் டெஸ் பால்ம்ஸ் அகாடெமிக்ஸ் விருதையும், அலையன்ஸ் மையத்தின் ஆசிரியை ஹேமா பார்த்தசாரதிக்கு ஆஃபிஸர் டெஸ் பால்ம்ஸ் அகாடெமிக்ஸ் விருதையும் அவர் வழங்கினார். பின்னர் அவர் பேசியது: தமிழ் மொழி, கலாசாரம் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டு விளங்குகிறது. தமிழ்ச் செம்மொழிக்காக அண்மையில் இங்கு மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இது மட்டும் போதாது. தமிழகத்தில் இருக்கும் தமிழை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும். இதுபற்றி துணை முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தபோது கூறியுள்ளேன். இந்திய இளைஞர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். ஏனெனில் உலக நாகரிகங்களில் அமெரிக்கா, ஐரோப்பா, எகிப்திய நாகரிகங்களின் வளர்ச்சியில் ஏற்ற, இறக்கங்கள் உள்ளன. ஆனால், இந்திய நாகரிகம் எந்தவித தடையுமில்லாமல் நிலையான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. எனவே, இந்தியராக இருப்பதற்கு இளைஞர்கள் பெருமைப்பட வேண்டும். போட்டி நிறைந்த உலகில் நம்மை தேடி வாய்ப்புகள் வராது. நாம் தான் அதைச் தேடிச் செல்ல வேண்டும். எனவே, கடின உழைப்பு தேவை என்றார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க. திருவாசகம் வரவேற்று பேசினார். பதிவாளர் சரவணன், தேர்வு கட்டுப்பாட்டாளர் லியோ அலெக்சாண்டர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.