சென்னை, நவ. 10: ஆந்திர மாநிலத்தில் புயல், வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு தமிழ்த் திரைப்பட அமைப்புகள் ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்கியுள்ளன. இதுகுறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், தென்னிந்திய வர்த்தக சபை ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆந்திரத்தில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அண்மையில் அங்கு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அனைத்து மொழி நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.10 லட்சம், தென்னிந்திய வர்த்தக சபை சார்பில் ரூ.10 லட்சம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையாக தெலுங்கு இயக்குநர் தாசரி நாராயணராவ், நடிகர் பாலகிருஷ்ணா ஆகியோரிடம் வழங்கப்பட்டது.