முல்லைப் பெரியாறு பிரச்னை: கோப்பில் நடந்த தவறு
First Published : 25 Sep 2009 02:45:44 AM IST
Last Updated :
25 Sep 2009 08:58:52 AM IST
சென்னை, செப். 24: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அண்மையில் எழுந்துள்ள பிரச்னைக்கு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கவனக் குறைவே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய அணை கட்டுமானம், வனப் பரப்புகளின் இடங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும். திட்டத்தின் நோக்கம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோர வேண்டும். இவ்வாறு அனுமதி வழங்கும்போது, பல்வேறு விளக்கங்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசு கோரும். அந்தத் திட்டம் குறித்து கோப்புகளைத் தயாரிக்கும்போது நீதிமன்றங்களில் வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா என்பன போன்ற கேள்விகளை மத்திய அரசு கேட்கும். முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசிடம் கேரளம் அனுமதி கோரியது. அனுமதி வழங்குவதற்கான கோப்பில், "முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக வழக்கு ஏதும் உள்ளதா?' என்ற கேள்விக்கு, "இல்லை' என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்தே, முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் தவறை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் செய்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.