பாகிஸ்தானுக்கு அமெரிக்க உதவி மும்மடங்கு அதிகரிப்பு
First Published : 26 Sep 2009 10:03:00 PM IST
Last Updated :
நியூயார்க்கில் மெட்ரோபாலிட்டன் அருங்காட்சியகத்தில் அதிபர் ஒபாமா அளித்த வரவேற்பில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. உடன் ஒபாமாவ
வாஷிங்டன், செப். 25: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் உதவி மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ராணுவம் அல்லாத பணிகளுக்காக 150 கோடி (ரூ. 7,500 கோடி) டாலர் நிதி உதவியை அளிக்க ஒபாமா அரசின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா அளிக்கும் நிதி உதவியை ஆயுதங்கள் வாங்கவும் அதை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதையும் பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது. எனவே நிதி உதவி அளிக்கும் விஷயத்தில் எச்சரிக்கை தேவை என இந்தியா குறிப்பிட்டிருந்தது. பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை இந்தியா எதிர்த்தது. இருப்பினும் அதையும் மீறி அமெரிக்க செனட் சபை நிதி உதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை பாகிஸ்தானுக்கு 50 கோடி டாலர் நிதி உதவியை அமெரிக்கா அளித்து வருகிறது. இதை மூன்று மடங்கு அதிகரித்து 150 கோடி டாலர் வழங்க முடிவு செய்துள்ளது. இத்தகவலை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்துக்கு வந்திருந்த பாகிஸ்தான் நண்பர்களிடம் அதிபர் ஒபாமா தெரிவித்தார். 26 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹால்புரோக், செனட் சபையில் இதற்கான மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார். இதன் மூலம் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையிலான நட்புறவு மேலும் வலுப்படும் என்று கூறினார். மற்ற நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பதை நீண்ட கால அடிப்படையில் தீர்மானம் மூலம் நிறைவேற்றியிருப்பது அமெரிக்க அரசியலில் இதுவே முதல் முறையாகும். செனட் சபை அளித்த ஒப்புதல் தீர்மானம் அடுத்த கட்டமாக பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின்னர் அதிபர் ஒபாமாவின் கையெழுத்தைப் பெற்ற பிறகு சட்டமாக இயற்றப்படும்.எஸ்.எம். கிருஷ்ணா கவலை: தற்போது நியூயார்க்கில் உள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் நிதி உதவி அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து கவலை தெரிவித்தார். கடந்த காலங்களில் அமெரிக்கா அளிக்கும் நிதி உதவிகள் அனைத்தும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஒப்புக் கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். குறைந்தபட்சம் அமெரிக்கா அளிக்கும் உதவித் தொகை எந்தெந்த பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையாவது கண்காணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் கடனுதவி தொடர்பான மசோதாவில் இந்தியாவுக்கெதிரான பயங்கரவாத தாக்குதலுக்கு இதைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கும். தற்போது அது திருத்தப்பட்டு அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்போடு இருக்க வேண்டும் என்றும் தீவிரவாதத்துக்கு ஆதரவாக இதைப் பயன்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.