தமிழ் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க எதிர்பார்ப்பது மிகப் பெரிய தவறு: ஜெயலலிதா அறிக்கை
First Published : 26 Sep 2009 10:30:00 PM IST
Last Updated :
சென்னை, செப். 25: திமுக அரசு கோவையில் நடத்தும் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் கருணாநிதி எதிர்பார்ப்பது மிகப் பெரிய தவறு என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒத்துழைப்பு தர வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதை ஏற்க முடியாது என்று ஜெயலலிதா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: "1966-ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய மலேசியத் தமிழர்கள் இன்று அங்கு இரண்டாம் தர குடிமக்களாக, துன்புறுகின்றனர். தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் கடந்த ஆண்டு போராடிய மலேசியத் தமிழர்கள் கொடூரமாக அடக்கப்பட்டனர். இதைக் கண்டித்து முதல்வர் கருணாநிதி குரல் கொடுக்கவில்லை. 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய இலங்கைத் தமிழர்கள், இன்று தங்கள் சொந்த மண்ணிலேயே அகதி முகாம்களில் அவதிப்படுகிறார்கள். தங்களின் சுய நிர்ணய உரிமைக்கான இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை, தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்திய அரசின் ராணுவ உதவியுடன்தான் இலங்கை அரசு துப்பாக்கி முனையில் அடக்கியது. கருணாநிதியின் மகனான மத்திய அமைச்சர் மு.க. அழகிரியால் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழில் பேச முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாடு அறிவிப்பால் தமிழுக்கும், தமிழனுக்கும் எந்தப் பயனும் இல்லை. இதற்கு முன்பு நடைபெற்ற எட்டு உலகத் தமிழ் மாநாடுகளும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டன. 1995-ம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற மாநாட்டை நடத்தியவர், சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் தலைவரும், ஜப்பானியக் கல்வியாளருமான பேராசிரியர் நோபோரு கராஷிமா. அதற்கான ஏற்பாட்டை மட்டும்தான் அரசு செய்தது. கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாடு அறிவிப்பில் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் குறித்து எவ்விதத் தகவலும் இல்லை. சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் ஆதரவு, அனுமதியில்லாமல், தன்னிச்சையாக கருணாநிதியால் 2010-ம் ஆண்டு மாநாடு நடத்தப்படுமானால், "ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு' என்ற தகுதியை அது பெற முடியாது. 1995-ம் ஆண்டிலிருந்து 14 ஆண்டுகளாக உலகத் தமிழ் மாநாட்டை நடத்த எந்த நாடும் முன்வராததற்குக் காரணம், தமிழ் உலகமே கலக்கத்தில், பெருங்குழப்பத்தில், அமளியில் இருந்து வருவதுதான். உலகத் தமிழர் துயர் நீக்க கருணாநிதி எதுவும் செய்யவில்லை. அரசியல் நாகரிகம் குறித்து கருணாநிதி பேசுகிறார். ஆனால் 1981-ல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் மதுரையிலும், 1995-ல் எனது ஆட்சியில் தஞ்சாவூரிலும் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் கருணாநிதியும், தி.மு.க.வும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், உலகத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும், எல்லாவற்றையும் மறந்து, கோவையில் தான் நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என கருணாநிதி எதிர்பார்ப்பது, அவர் செய்யும் மிகப்பெரிய தவறாகும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.