மத்திய அரசின் மாதிரிப் பள்ளி அமைக்க இடம் தேர்வு
First Published : 24 Oct 2009 01:14:26 AM IST
Last Updated :
ஓமலூர், அக்.23: மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மாதிரிப் பள்ளி அமைப்பதற்கான இடத்தை வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெள்ளிக்கிழமை தேர்வு செய்தார். நாடு முழுவதும் கல்வியில் பின் தங்கிய இடங்களைத் தேர்வு செய்து கேந்திரிய வித்யாலயா மாதிரிப் பள்ளிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் சுமார் 44 கல்வியில் பின்தங்கிய வட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக எடப்பாடி, கொங்கணாபுரம், காடையாம்பட்டி பகுதிகளில் இப் பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. காடையாம்பட்டி ஒன்றியத்தில் இப் பள்ளிக்கூடம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தேர்வு செய்வதற்காக ஆலோசனை நடத்தினார். பூசாரிப்பட்டி மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான வயலைத் தேர்வு செய்த அமைச்சர், பின்னர் இதுகுறித்து அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். காடையாம்பட்டி ஒன்றியக் குழுத் தலைவர் வினோதராணி ருத்ரகுமார், துணைத் தலைவர் கணேசன், தாரமங்கலம் ஒன்றிய திமுக செயலர் அம்மாசி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக தீவட்டிப்பட்டியில் சமத்துவபுர தொடக்க விழா நடைபெற உள்ள இடத்தைப் பார்வையிட்ட அவர், மேடை அமைக்கும் பணிகளை சனிக்கிழமைக்குள் (அக்.24) முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.