பள்ளி ஆசிரியர்கள் தர்ணா
First Published : 22 Nov 2009 01:09:10 AM IST
Last Updated :
ஈரோடு, நவ. 21: அனைத்துப் பள்ளிகளிலும் கலைப்பிரிவு பாடங்களைத் துவக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் பள்ளி ஆசிரியர்கள் சனிக்கிழமை தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஈரோடு மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற தர்ணாப் போராட்டத்துக்கு, கழக மாவட்டத் தலைவர் இரா.பெ.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கே.ஏ.மதியழகன் முன்னிலை வகித்தார். அகில இந்திய மாநில அரசு ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலர் ஆர்.முத்துசுந்தரம், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மூ.சீனிவாசன், இடைநிலை ஆசிரியர் சங்க மாநில இணைச் செயலர் டி.அலெக்ஸôண்டர் உள்ளிட்டோர் பேசினர்.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உரிய பதவி உயர்வுகளை உடனடியாக வழங்குதல், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை நியமனம் செய்ய வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாக நடைமுறைப்படுத்தல், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், பிற படிகள் வழங்குதல், அனைத்துப் பள்ளிகளிலும் கலைப்பிரிவு பாடங்களைத் துவக்கி, குறைந்தது 10 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்தல், காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் அலுவலர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புதல், ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் தேர்ச்சி விழுக்காட்டைக் காரணம் காட்டி ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளைக் கைவிடுதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுதல், அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல், அரசே ஏற்று நடத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாப் போராட்டம் நடைபெற்றது.