மாணவர் அறிவை மெருகூட்டவே குழந்தைகள் திரைப்பட விழா: மாவட்ட ஆட்சியர்
First Published : 04 Aug 2009 11:02:17 AM IST
Last Updated :
HTML clipboard
மதுரை, ஆக. 3: மாணவ, மாணவியரின் அறிவை மெருகூட்டுவதற்காகவே குழந்தைகள்
திரைப்பட விழா நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ந.மதிவாணன் தெரிவித்தார்.
தேசியக் குழந்தைகள் திரைப்பட நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும்
குழந்தைகள் திரைப்பட விழாவை மதுரை அம்பிகா திரையரங்கில் திங்கள்கிழமை
தொடக்கிவைத்துப் பேசுகையில் ஆட்சியர் இதைத் தெரிவித்தார்.
அவர் பேசியது:
குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கவும், சிறந்த சந்ததியினரை உருவாக்கும்
நோக்கிலும் தேசிய குழந்தைகள் திரைப்பட நிறுவனம் நல்ல படங்களைத் தயாரித்து குழந்தைகள்
திரைப்பட விழாக்களில் மாணவ, மாணவியருக்கு திரையிடுகிறது.
மதுரை மாவட்டத்தில் மதுரை, மேலூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி உள்பட பல
இடங்களில் உள்ள 40 திரையரங்குகளில் சுமார் 70 காட்சிகள் வாயிலாக 80 ஆயிரம்
குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் குழந்தைகள் திரைப்பட விழாவின் மூலம் செல்லம், ஹயாத், துபாஷி,
அதிசயகோடு-1, அதிசயகோடு-2, ஆயிஷா-1, ஆயிஷா-2 உள்ளிட்ட 7 படங்கள் திரையிடப்படவுள்ளன.
மாணவ, மாணவியர் படத்தைப் பார்த்து ரசிப்பதோடு நின்றுவிடாமல், அதுகுறித்த
விமர்சனங்களை கல்வித்துறையின் மூலம் எழுதி அனுப்பலாம்.
அதில் சிறந்த 3 விமர்சனங்களுக்கு பரிசு வழங்கப்படும். முதல் பரிசாக தங்கப்
பதக்கமும், 2-வது பரிசாக வெள்ளிப் பதக்கமும், 3-வது பரிசாக வெண்கலப் பதக்கமும்
வழங்கப்படும்.
குழந்தைகள் இந்தத் திரைப்படங்களைக் கண்டு பயனடைவதோடு திறனாய்வும் செய்து பரிசு
பெறவேண்டும் என்றார் ஆட்சியர்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் எம்.ஆர்.அண்ணாமலை, அம்பிகா
திரையரங்கு உரிமையாளர் பி.பிச்சை, மிட்லண்ட் திரையரங்கு உரிமையாளர் கஜேந்திரன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் சிவ.சு.சரவணன் வரவேற்றார். முதன்மைக் கல்வி
அலுவலர் கு.ரஜினி ரத்னமாலா நன்றி கூறினார்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் சாந்தா, அம்மையப்பன் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்
கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, "ஆயிஷா-1' திரைப்படம் பள்ளிக் குழந்தைகளுக்காக திரையிடப்பட்டது.