மீனவர்களை விடுவிக்கக் கோரி 6-வது நாளாக தொடரும் மீனவர்கள் வேலைநிறுத்தம்
First Published : 24 Sep 2009 02:19:56 AM IST
Last Updated :
ராமேசுவரம், செப். 23: இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்யக் கோரி, ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து 6-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேசுவரம் மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலைக் கண்டித்து, ஆகஸ்ட் 21-ம் தேதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மற்றும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீன்துறை அமைச்சரின் உறுதி மொழியின்படி, வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு, செப்டம்பர் 12-ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதோடு, 21 பேரையும் மற்றும் 5 படகுகளையும் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். இதைக் கண்டித்து, ராமேசுவரம் மீனவர்கள் மறுபடியும் செப்டம்பர் 18-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த வேலை நிறுத்தம் புதன்கிழமையோடு 6-வது நாளாகத் தொடர்கிறது. இதனால், சுமார் ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை முழுவதும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. மீனவர்கள் தொழிலுக்குச் செல்லமுடியாமல் வீட்டில் முடங்கிப் போய் கிடக்கின்றனர். இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தால், அடிக்கடி வேலை நிறுத்தம் செய்யப்படுவதால், மீனவக் குடும்பங்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றன. எனவே பிழைப்புக்காக தூத்துக்குடி, குமரி போன்ற இடங்களுக்கு வேலைதேடிச் செல்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்