திருமங்கலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை: எதிர்த்து அனைத்துக் கட்சியினர் தர்னா
First Published : 09 Oct 2009 12:00:00 AM IST
Last Updated :
HTML clipboard
திருமங்கலம், அக். 8:சிவரக்கோட்டையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை
எதிர்த்து அனைத்துக் கட்சி சார்பாக வியாழக்கிழமை திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம்
முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சிவரக்கோட்டை, கரிசல்காளாம்பட்டி மற்றும் சுவாமிமல்லம்பட்டி கிராமங்களில்
உள்ள விளைநிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு
முடிவெடுத்துள்ளது. இதை எதிர்த்து 3 கிராம மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வியாழக்கிழமை காலை திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 3 கிராம மக்களும்
மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, அஇமூமுக, பாமக மற்றும்
திமுகவினர் சிப்காட் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி தர்னா போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
மார்க்சிய கம்யூனிஸ்ட் தாலுகாச் செயலர் ஓ. சுப்புக்காளை தலைமை வகித்தார்.
இக்கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலர் வி. சுந்தரம், மதிமுக மாவட்டச் செயலர்
வீர. தமிழ்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் தாலுகாச் செயலர் கருத்தக்கண்ணன், பாமக நகரச்
செயலர் த. கண்ணையா, அஇமூமுக ஒன்றியச் செயலர் ஏ.சி. ஆனந்தன் ஆகியோர்
சிறப்புரையாற்றினர்.
விவசாய சங்க மாவட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.