Saturday, July 31, 2010 4:08 AM IST
Click
மதுரை
தோப்பூரில் 5 ஏக்கரில் ரூ.150 கோடியில் எய்ம்ஸ் சிறப்பு மருத்துவமனை

First Published : 21 Feb 2010 04:28:28 AM IST


மதுரை,பிப். 20: மதுரை அருகே தோப்பூரில் ரூ.150 கோடியில் 5 ஏக்கரில் அமைய உள்ள  எய்ம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வி.ஐ.பி.க்களுக்கான அறைகளுடன் அமைக்கப்பட உள்ளது. இதற்கான புதிய கருத்துரு கடந்தவாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும் மார்ச்சில் கட்டுமானப்பணியைத் தொடங்கி 2011 ஆம் ஆண்டு செப்டம்பரில் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தென்மாவட்டங்களில் உள்ள மக்களின் உயர்தர மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் வகையில் மதுரையில் "எய்ம்ஸ்'  கிளை அமைக்கவேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தோப்பூரில் 382 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் எய்ம்ஸ் மருத்துவமனை போல நவீன மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் தோப்பூரில் 25 ஏக்கரில் ராஜாஜி மருத்துவமனையின் விரிவாக்கக் கட்டடங்கள் நவீனமுறையில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்படும் மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைதுறை, குடல், ஆசனநோய் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைத் துறை, சிறுநீரகவியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை ஆகிய பிரிவுகளும் இத்துறைகளுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான 50 படுக்கை வசதிகளும் அங்கு அமைய உள்ளதாகவும், ஒவ்வோரு படுக்கையும் தலா ரூ. 30 லட்சத்தில் அமையும் எனவும் கூறப்பட்டது. அரசு மருத்துவமனையின் விரிவாக்கமாக 25 ஏக்கரில் அமைய உள்ளதாக முன்பு கூறப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தற்போது 5 ஏக்கராக சுருங்கிவிட்டது. இது  தொடர்பாக திட்டக் கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது  மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய கருத்துருப்படி மருத்துவமனை கட்டடங்கள் மட்டும் ரூ.98 கோடியில் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வோர் துறைப் பிரிவிலும் வி.ஐ.பி.க்களுக்கான ஸ்பெஷல் அறையும் கட்டப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வி.ஐ.பி. அறையில் நவீன சாதனங்கள், வசதிகள் கொண்டதாக இருக்கும். இதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளன. நோயாளியுடன் அவருடைய  உதவியாளர் ஒருவரும் தங்கும் வகையில் சகல வசதிகளுடன் அந்த அறை அமைக்கப்பட உள்ளது.

தோப்பூரில் அமையவுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் நேரடியாக அனுமதிக்கப்படமாட்டார்கள். மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக பரிசோதிக்கப்பட்ட பிறகே டாக்டர் பரிந்துரையின் பேரில் தோப்பூரில் அனுமதிக்கப்படுவர்.

இது குறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் (பொறுப்பு) ஐ.சந்திரசேகரனிடம் கேட்டபோது, தோப்பூரில் அமைய உள்ள மருத்துவமனையில் உலகத் தரமான சிகிச்சை சாதாரண மக்களுக்கு கிடைக்கும் வகையில் நவீன சாதனங்கள் அமைக்கப்படும் என்றார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்