இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் குமரியில் இருந்து பிரசார பயணம் தொடக்கம்
First Published : 28 Oct 2009 12:27:50 AM IST
Last Updated :
கன்னியாகுமரி, அக். 27: இலங்கை முள்வேலி முகாமில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு வாகன விழிப்புணர்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காந்தி மண்டபம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.சந்திரபாபு தலைமை வகித்தார். கன்னியாகுமரி நகர மதிமுக செயலர் எஸ்.அருள்ராஜ் வரவேற்றார். பாமக மாவட்டச் செயலர் (கிழக்கு) சோ.சுரேஷ், எம்.பி.ரவி (மேற்கு) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பிரசார பயணத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலர் சி.மகேந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு பிரசார பயணத்தை தொடக்கிவைத்தார். மாநில மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத், பாமக மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் அ.வியனரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலர் கோ.பழனிச்சாமி, மாவட்ட மதிமுக செயலர் எஸ்.ரத்தினராஜ், நாகர்கோவில் நகர மதிமுக செயலர் என்.தில்லைசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.