கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களின் பயன்பாடு: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்
First Published : 21 Oct 2009 05:31:10 AM IST
Last Updated :
21 Oct 2009 02:26:02 PM IST
திருச்சி, அக். 20: தொழில் வளர்ச்சிக்காக தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களின் பயன்பாடு குறித்த வெள்ளை அறிக்கையை மாநில அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் அமைப்புசாராத் தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் காவிரி நதிப்படுகை பாதுகாப்பு இயக்கம் சார்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புப் பொருளாதார மண்டல எதிர்ப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புன்செய் மற்றும் நன்செய் விளை நிலங்களை விவசாயம் அல்லாத காரணங்களுக்காக எடுக்கக் கூடாது. சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம், விதிமுறைகள் ரத்து செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக கையகப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களின் பயன்பாடு குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மாநிலத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளுடன் ஓர் ஆய்வை, தமிழக அரசு நடத்தி விவசாயத் துறையின் நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்கள் பயன்பாட்டிலுள்ள பாரம்பரிய தானிய மற்றும் பருப்பு வகைகளைப் பாதுகாக்க வேண்டும். உலக வர்த்தக நிறுவனத்தின் விவசாயம் குறித்த மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில், சிறப்புப் பொருளாதார மண்டல எதிர்ப்பு இயக்க அமைப்பாளர் மதுமிதா, அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கத்தின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் கீதா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். தொழிலாளர் கூட்டமைப்பின் இணைச் செயலர் வீ. மகேசுவரன் தலைமை வகித்தார். காவிரி நதிப்படுகை பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச் செயலர் வழக்குரைஞர் தமிழகன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.