விக்டோரியா நினைவு வளைவு அகற்றம்
First Published : 15 Nov 2009 06:09:20 AM IST
Last Updated :
புதுக்கோட்டை, நவ. 14: புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில், ஆங்கிலேய ராணி விக்டோரியாவின் ஆட்சிக் காலத்தைக் குறிக்கும் வகையில் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட விக்டோரியா நினைவு வளைவு சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.ஆங்கிலேயர் ஆட்சியில் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு தனி சமஸ்தானமாக புதுக்கோட்டை திகழ்ந்தது. அப்போது ஆங்கிலேய ராணி விக்டோரியாவின் ஆட்சிக் காலத்தைக் குறிக்கும் வகையில், புதுக்கோட்டை நகரின் கிழக்கு ராஜ வீதியின் முகப்பில் 1896-ல் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னரால் நினைவு வளைவு அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி முடிவுற்று நாடு சுதந்திரமடைந்த பிறகு நிகழாண்டின் தொடக்கம் வரை இது பாரம்பரிய நினைவுச் சின்னமாகவே திகழ்ந்தது. இதைக் கடந்து செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த வளைவின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது ஒரு வழக்கமாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இந்த வளைவு சேதமடைந்தது. எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற சூழல் ஏற்பட்டது. இதனால், வளைவைச் சீரமைக்க வேண்டும் அல்லது இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுநல ஆர்வலர்களும் பொதுமக்களும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறையினர் மற்றும் கட்டடத் துறை நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவினர் மூலம் இந்த வளைவின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அந்தக் குழுவினர், வளைவைச் சீரமைக்க வாய்ப்பில்லை என்றும் இடித்து அகற்றுவதே ஒரே வழி என்றும் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. ஆனால், புதுக்கோட்டை நகரில் ஒரு பாரம்பரிய சின்னமாகத் திகழும் இந்த வளைவை அகற்றக்கூடாது என்ற குரல்களும் எழுந்ததால், இவ்விஷயத்தில் ஓர் உடனடி முடிவை எடுக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் யோசித்துவந்தது. இந்நிலையில், மழைக்காலம் தொடங்கிவிட்டதால், சேதமுற்ற வûüவு தானாகவே இடிந்து விழக்கூடிய வாய்ப்பு இருப்பதையும் அது சேதங்களை உருவாக்கும் என்பதையும் உணர்ந்த மாவட்ட நிர்வாகம் சனிக்கிழமை காலை வளைவை இடிக்க உத்தரவிட்டது. இதன்படி, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வளைவு இடித்து அகற்றப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் நீடித்து வந்த ஆபத்தும், போக்குவரத்து தடையும் நீங்கியதால் பொதுமக்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டது. இந்நடவடிக்கையின்போது மாவட்ட ஆட்சியர் ஆ. சுகந்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பா. மூர்த்தி, நகராட்சி ஆணையர் கே. பாலகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சி. முத்துச்சாமி, நகர்மன்றத் துணைத் தலைவர் க. நைனாமுஹம்மது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.